22-வது உலகக் கோப்பை காற்பந்து திருவிழா கட்டாரில் இடம்பெற்றுவரும் நிலையில் அல்பேத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது. இந்நிலையில் பரபரப்பாக ஆரம்பித்த ஆட்டத்தின் முதல் பாதியின் 5வது நிமிடத்திலே பிரான்ஸ் அணி வீரர் தியோ ஹெர்னண்டஸ் தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் கோல் அடிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதன்மூலம் ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ராண்டல் கோலோ முஆனி தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். பின்னர் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் கோல் எதுவும் அடிக்காததால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை வென்றது. இதன் மூலம் எதிர்வரும் டிசம்பர் 18ம் தேதி பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன. முன்னதாக நடப்பு சம்பியன் அந்தஸ்துடன், வலம் வரும் தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பிரான்ஸ் அணி லீக் சுற்றில் 2 வெற்றிஇ ஒரு தோல்வியுடன் முதலிடம் பிடித்தது. 2-வது ரவுண்டில் 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தையும், காலிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தையும் வென்று அரையிறுதிக்கு தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த உலகக் கோப்பையில் கணிக்க முடியாத ஒரு அணியாக அரையிறுதி வரை நுழைந்து ஆச்சரியப்படுத்தியிருந்தஇ மொராக்கோ அணி அரையிறுதியை எட்டிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற சரித்திர சிறப்பையும் பெற்றது.