உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர்: முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

0
134

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 302 ஓட்டங்களால் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதிபெற்றுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 92 ஓட்டங்களையும், விராட் ஹோலி 88 ஓட்டங்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 82 ஓட்டங்களையும், பெற்றனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மதுசங்க 5 விக்கெட்டுக்களையும், துஸ்மந்த சமீர 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதன்படி, 358 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்று படுதோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித்த 14 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்யூஸ் 12 ஓட்டங்களையும் மற்றும் மஹீஸ் தீக்‌ஷன 12 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணியில் 5 வீரர்கள் எவ்வித ஓட்டங்களையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சில் மொகமட் சமி 05 விக்கெட்டுக்களையும், மொகமட் சிராஜ் 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக மொகமட் சமி தெரிவு செய்யப்பட்டார்.