32 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கால்பந்து திருவிழா கட்டாரில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது. இதன் முதலாவது ஆட்டத்தில் வரவேற்பு நாடான கட்டார் – ஈகுவடார் அணிகள் மோதுகின்றன. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942, 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் இந்த போட்டி நடைபெறவில்லை. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கட்டாரில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது. கால்பந்து ரசிகர்களை கட்டிபோடப்போகும் இந்த திருவிழா டிசம்பர் 18-ந் திகதி வரை 29 நாட்கள் அரங்கேறுகிறது. அங்குள்ள 5 நகரங்களில் பிரமாண்டமாக கட்டப்பட்டு இருக்கும் 8 மைதானங்களில் போட்டி நடக்கிறது. அரபு நாட்டில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். அத்துடன் ஆசிய கண்டத்தில் இந்த போட்டி நடப்பது 2-வது முறையாகும். இந்த தொடரில் 5 முறை சம்பியனான பிரேசில், 4 முறை சாம்பியனான ஜேர்மனி, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், அர்ஜென்டீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் கலந்து கொள்கின்றன.