உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றால்?

0
171

யாழ். மாநகர சபையின் வரவு – செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது.
உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியத்தின் பெயரில் அதிகாரத்தை செலுத்துவோருக்கு முன்னாலுள்ள சவாலை எதிர்வு கூறுகின்றது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேறிய மணிவண்ணன் தலைமையிலான அணியினர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) ஆதரவுடன் ஆட்சி அமைத்திருந்த நிலையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவை விலக்கிக்கொண்டபோது, மணிவண்ணன் அணி தோல்வியுற்றது.
இதனைத் தொடர்ந்து, மீளவும் தமிழரசு கட்சியினர் கூட்டமைப்பின் ஆதரவுடன் அதிகாரத்தை கைப்பற்றினர்.
ஆனால், ஆட்சியை சுமூகமாக கொண்டுசெல்ல முடியவில்லை.
இது எதனை உணர்த்துகின்றது? உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்றால், இவ்வாறானதொரு நிலைமை வடக்கு – கிழக்கிலுள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஏற்படலாம்.
ஏனெனில், வடக்கு – கிழக்கில் தமிழர்கள் ஆட்சியமைக்கக்கூடிய பெரும்பாலான சபைகளை எந்தவொரு தமிழ் கட்சியும் தனித்துக்
கைப்பற்ற முடியாததொரு சூழலே ஏற்படும்.
இதற்கு நடைமுறையிலுள்ள உள்ளூராட்சி தேர்தல் முறைமையே பிரதான காரணமாகும்.
இந்த முறைமையை மாற்றியமைக்கவேண்டுமென்பதே பெரும்பாலான கட்சிகளின் விருப்பமாக இருக்கின்றது.
இந்த முறைமையில் சிறிய கட்சிகளுக்கு வாய்ப்பிருந்தாலும்கூட, சபைகளை கொண்டு நடத்துவதில் குழப்பங்களுக்கான வாய்ப்புகளையும் இந்த முறைமை கொண்டிருக்கின்றது.
ஆனால், இந்த முறைமை பரிசீலிக்கப்பட்டபோது, கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரனும் பங்குகொண்டு ஆதரவை வழங்கியிருந்தார்.
எந்த முறைமையில் தேர்தல் இடம்பெற்றாலும் வீட்டுச் சின்னத்துக்கே மக்கள் வாக்களிப்பார்கள் என்னும் நம்பிக்கையின் அடிப்படையில்தான் இந்த முறைமையை அப்போது நோக்கப்பட்டது.
ஆனால், தேர்தல் இடம்பெற்றதைத் தொடர்ந்துதான் இந்த முறைமையிலுள்ள சிக்கலை அனைவரும் புரிந்துகொண்டனர்.
தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரையில் ஒரு வகையில் நோக்கினால் தேர்தல் பிற்போடப்பட்டு காலப்போக்கில் இல்லாமல் போனால் நல்லதென்று எண்ணுமளவுக்கே நிலைமைகள் காணப்படுகின்றன.
யாழ். மாநகர சபை இதற்கு ஒரு படிப்பினையாக இருக்கின்றது.
இல்லாவிட்டால், உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்த் தேசிய கதைகளை விடுத்து அனைத்து தரப்பினருடன் இணைந்து செயல்படும் தீர்மானத்துக்கு வரநேரிடும்.
அடிப்படையில் உள்ளூராட்சி மன்றங்கள் தமிழ்த் தேசியம் பேசும் இடங்களுமல்ல.
உள்ளூராட்சி மன்றங்களில் மட்டுமல்ல, எதிர்காலத்தில் மாகாண சபையிலும் இவ்வாறான நிலைமைகள் ஏற்படலாம்.
குறிப்பாக கிழக்கு மாகாண சபையில் ஏனைய தரப்புகளுடன் இணைந்து பயணிக்கும் நிலைமை தவிர்க்கவே முடியாது.
ஆளும் தரப்பாக இருக்க வேண்டுமென்றால் ஒன்றில் முஸ்லிம்களோடு அல்லது சிங்களவர்களோடு இணைந்துதான் நிர்வாகத்தில் பங்குகொள்ளவேண்டிய நிர்ப்பந்தமுண்டு.
இந்த நிலைமை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம்.
ஏனெனில், தமிழ்த் தேசியத்தை முன்னிலைப்படுத்தும் கட்சிகள் தொடர்ந்தும் சிதறிவரும் நிலையில், ஏனைய கட்சிகள், சுயேச்சை குழுக்கள் ஆசனங்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகமுண்டு.
இதனை கருத்தில்கொண்டு தமிழ்த் தேசியம் அடிப்படையிலான கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் தேர்தல்கள் மூலம் சிதறுண்டு போகும் நிலைமையே உருவாகும்.