உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சகல தரப்புகளையும் அரவணைக்கும் ஆட்சிமுறைக்கான ஓர் அழைப்பு – தேசிய சமாதானப் பேரவை!

0
15

உள்ளூராட்சி சபைகளில் பல இனத்தவர்களும் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒத்துழைத்துச் செயற்படுவதை அரசாங்கம் ஆதரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கும் தேசிய சமாதானப் பேரவை உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகள் சகல தரப்புகளையும் அரவணைக்கும் ஆட்சிமுறை ஒன்றை வேண்டிநிற்கின்றன என்றும் கூறியிருக்கிறது.

இது தொடர்பில் தேசிய சமாதானப் பேரவை வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது : 

கடந்த காலத்தைப் போன்று பெருமளவில் அரச வளங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் அண்மைய உள்ளூராட்சி தேர்தல்கள் அமைதியாகவும் ஒழுங்கமைவான முறையிலும் நடந்து முடிந்திருப்பது உற்சாகம் தரும் ஒரு மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. 

தேர்தல் நேர்மையையும் ஜனநாயக நியமங்களையும் பேணிக்காக்க வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கத்துக்கு இருக்கும் மெச்சத்தக்க பற்றுறுதியை அது வெளிக்காட்டுகிறது.

தேர்தல்கள் நடைபெற்ற 339 உள்ளூராட்சி சபைகளில் 267 சபைகளில் கூடுதல் ஆசனங்களை கைப்பற்றியதுடன் 120 சபைகளில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று நாட்டில் மிகவும் பெரிய அரசியல் கட்சியாக வெளிக் கிளம்பியிருக்கும் ஆளும் தேசிய மக்கள் சக்தியை நாம் வாழ்த்துகிறோம். 

உள்ளூராட்சி சபைகளில் அரசாங்கம் எவ்வாறு பெரும்பான்மையை அமைக்கப்போகிறது என்பதிலும் எதிர்க்கட்சிகளின் தலைமையிலான சபைகளை எவ்வாறு ஒப்புரவாக கையாளப்போகிறது என்பதிலுமே அதன் அரசியல் மேதகைமை (Statesmanship) பரீட்சைக்கு உள்ளாகப்போகிறது.

வடக்கு, கிழக்கில் உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகளை அதாவது தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் அந்த இரு மாகாணங்களிலும் பெருமளவு சபைகளில் பெற்ற வெற்றிகள் அந்த மக்களின் வேறுபட்ட தேவைகளையும் அபிலாசைகளையும் வெளிக்காட்டுவதாகவும் அவர்களுடன் முழு அளவில் ஊடாட்டங்களை   அரசாங்கம் செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாகவும் தேசிய சமாதானப் பேரவை கருதுகிறது.

வடக்கு, கிழக்கிற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் மேற்கொண்ட உயர்மட்ட விஜயங்களின் மூலமாக சிறுபான்மைச் சமூகங்களுக்கு நேசக்கரத்தை நீட்டுவதற்கு அரசாங்கம் பாராட்டத்தக்க முயற்சிகளை  முன்னெடுத்தது. ஆனால், இந்த அடையாளபூர்வமான சமிக்ஞைகளை தொடர்ந்து வடக்கு, கிழக்கில் தமிழர்கள், முஸ்லிம்களினதும் மலையகத்தில் தோட்டத் தொழிலாளர் சமூகத்தினதும் வரலாற்று ரீதியான மற்றும் சமகால பிரச்சினைகளை கையாளக்கூடிய உறுதியான கொள்கைகளை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.

கட்டமைப்பு ரீதியான சமத்துவம் மற்றும் பொருளாதார நீதி மீதான அரசாங்கத்தின் பற்றுறுதி, இலங்கையின் பல்வகைமையையும் பன்முகத்தன்மையையும் மதிக்கும் வகையிலான — வெளிப்படைத் தன்மை கொண்டதும் சகல தரப்புக்களையும் அரவணைக்கும் பாங்குடையதுமான தீர்மானம் எடுக்கும் செயன்முறையுடன் இணைந்ததாக அமையுமானால் சிறுபான்மைச் சமூகங்களின் வரவேற்பை பெருமளவுக்கு பெறமுடியும் என்று தேசிய சமாதானப் பேரவை நம்புகிறது.

உள்ளூராட்சி தேர்தல்களின் முடிவுகளை அரசாங்கம் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் அரசியல் பிரதிநிதிகளை ஆட்சி முறையில் பங்காளிகளாக்குவதற்காக அவர்களுடன் பெருமளவுக்கு ஊடாட்டங்களைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக நோக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். விரைவாக தேர்தல்களை நடத்தி மாகாண சபை முறைமையை மீண்டும் செயற்பட வைப்பதுடன் அதிகாரப்பகிர்வு குறித்து பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பது நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கிய முக்கியமான அடியெடுத்து வைப்புக்களாக அமையமுடியும்.

பாராளுமன்றத்தில் மூன்றில் பெரும்பான்மை இருக்கும் நிலையில், நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டிருக்கும் அரசியல் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் முறைமை மாற்றத்தைக் கொண்டுவருவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குமான ஒப்பற்ற வாய்ப்பு ஒன்றை அரசாங்கம் கொண்டிருக்கிறது. முறைமை மாற்றத்தைச் செய்வதற்காகவே கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் அரசாங்கம் ஆணைகளைப் பெற்றது.

மாகாண சபை முறைமையை மீண்டும் செயற்பட வைத்து அதற்கு அதிகாரமளித்தல்,  வடக்கில் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலங்களை அவற்றின் சட்ட ரீதியான உரிமையாளர்களுக்கு திருப்பிக் கையளிப்பதை துரிதப்படுத்துதல், கடந்தகால வனமுறைகளுக்கு பெ்றுப்புக்கூறப்படுவதை உறுதிசெய்தல், உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கு அதிகாரமளித்தல், எளிதில் ஊறுபடக்கூடிய இன, மத சமநிலையை குழப்புகின்ற அத்துமீறல்களை தடுத்து நிறுத்துதல் ஆகியவையும் இவற்றில் அடங்கும்.

குறிப்பாக, துருவமயமாதலை குறைப்பதற்காக உள்ளூராட்சி சபைகளில் பல இனங்களுக்கு இடையிலும் பல கட்சிகளுக்கு இடையிலும் ஒத்துழைப்பை ஆதரிக்க வேண்டும் என்று தேசிய சமாதானப் பேரவை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறது. உள்ளூராட்சி சபைகள் ஆளும் கட்சி உறுப்பினர்களினால் நிருவகிக்கப்படுகிறதா அல்லது எதிர்க்கட்சி உறுப்பினர்களினால் நிருவகிக்கப்படுகிறதா  என்பதை பார்க்காமல், அவை செயற்திறனுடனும் பயனுறுதியுடனும் இயங்குவதற்காக சகல சபைகளுக்கும் ஒப்புரவான முறையில் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.

ஒவ்வொரு உள்ளூராட்சி சபையும் சமமான பெறுமதியைக் கொண்டிருப்பதால் எந்த கட்சியினால் அவை நிருவகிக்கப்படுகின்றன என்பது குறித்து எந்த வேறுபாடும் காட்டப்படக் கூடாது. 

உள்ளூராட்சி சபைகளின் அந்த பெறுமதி மக்களின் அதிகாரத்தில் பதிந்துகிடக்கிறது. சகல தரப்புகளையும் அரவணைக்கும் ஆட்சிமுறையை மேம்படுத்துவது என்பது தீர்மானங்களை மேற்கொள்ளும் செயன்முறைகளில் பல்வேறு சமூகங்களும் பயனுறுதியடைய வகையில் ஈடுபடுத்தப்படுவதையும் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதையும் உறுதிசெய்வதற்கு  நிலைபேறான முயற்சிகளை வேண்டிநிற்கிறது.