பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளின் வரவில் சகல மக்களின் வாழ்விலும் மாற்றம் தரும் நீடித்த மகிழ் வாழ்வுமலரட்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் திருநாள் நாம் நேசிக்கும் தொன்று தொட்ட தமிழர் பண்பாட்டு பெருநாள். உழுதுண்டு வாழும் உழவர் மக்கள் காலந்தோறும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் நன்னாள். தமது வாழ்வுயர வழிவகுத்த சூரியனுக்கு நன்றி செலுத்துவது போல், தமது வாழ்வெங்கும் மலர்ந்தும் மறையாத மாசற்ற ஒளிச்சுடராக நின்று இருள் சூழ்ந்த இடர் பூமியில் இருந்து நடைமுறை சாத்தியமான பாதையில் தம்மை விடிவை நோக்கி அழைத்து செல்பவர்களுக்கும் தமிழ் மக்கள் முழுமையான நன்றியை செலுத்த முன்வரவேண்டும். அரசியல் அதிகாரங்களை மக்கள் நலன் சார்ந்து சரிவரப் பயன்படுத்துவதற்கும் முன்னோக்கி செல்வதற்கும் வல்லமை உள்ளவர்களுக்கு வலிமை சேர்ப்பதே நாமார்க்கும் அடிமையல்லோம் யமனைஅஞ்சோம், நரகத்தில் இடர்படோம் என நிமிர்ந்தெழும் காலத்திற்கு வழி சமைக்கும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற எமதுமக்களின் நம்பிக்கைகள் நிறைவேறி வருகின்றன. நீண்ட காலமாக நாம் வலியுறுத்தி வருவதையே வரலாறு இன்று மீண்டும் ஏற்றுக்கொண்டு வருகின்றது. வறுமையற்ற வாழ்வு மலர வேண்டும். உழைக்கும் மக்களின் வாழ்வுயரவேண்டும். வீடற்ற மக்களுக்கு வீடுகளும், நிலமற்ற மக்களுக்கு காணி நிலங்களும் வேண்டும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.