யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் புகுந்து, உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டுள்ள சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது .
அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் , குறித்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள், ஆயுதங்களால் தாக்கி தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது .”திருநங்கைளின் உணர்வுகளை தவறாக சித்தரிக்காதே” என அச்சடிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள வீட்டில் போடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.