கடந்த ஞாயிற்றுக்கிழமை, டான் தொலைக்காட்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்றோ பிரான்சேயின் நேர்காணல் நடைபெற்றது. இந்த உரையாடலின்போது அவர் பல்வேறு விடயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார். இதன்போது அவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் கவனத்துடன் நோக்க வேண்டியதாகும்.
அதாவது, ஐந்து வருடங்களில் இலங்கையின் வறுமை இரண்டு மடங்காகும் என்று அவர் குறிப்பிடுகின்றார். அவர் ஆய்வுகளின் அடிப்படையில்தான் அவ்வாறு கூறுகின்றார். ஏற்கனவே, பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கிடக்கும் இலங்கை அரசியல் ரீதிதியிலும் சமூகரீதியிலும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் வறுமை நிலை இரண்டு மடங்காக அதிகரிக்கும் சூழல் உருவாகுமாயின், அதன் அரசியல் விளைவுகளும் மிகவும் மோசமானவையாக இருக்கும்.
சமூகக் கட்டமைப்புகளும் நிலைகுலைந்து போகும் ஆபத்து ஏற்படும். இந்த நிலைமை அனைத்து மக்களுக்கும் உரியது. அனைத்தையும் வெறும் தமிழ்த் தேசியம் என்னும் கண்ணாடி கொண்டு நோக்குவதையே அறிவென்றும் இன உணர்வு எனவும் எண்ணிக் கொண்டிருக்கும் நமது சூழலில் வழமையான பார்வைக்கு வெளியில் சென்று விடயங்களை நோக்கும் போக்கு அவசியமானது. வடக்கு, கிழக்கில் மக்கள் அதிக வறுமையை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டால் அது அரசியல் ரீதியிலும் சமூக ரீதியிலும் பலவாறான நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்திலும் அது தமிழ் மக்களை பாதிக்கவில்லை. தமிழ் மக்கள் இதனை விடவும் மோசமான நிலைமையை யுத்த காலத்தில் எதிர்கொண்டிருந்தவர்கள். அவர்கள் இதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை – என்றவாறான கதைகளே புனையப்பட்டன. தமிழ் ஊடகப் பரப்பிலும் அவ்வாறான பார்வைகளுக்கே முன்னுரிமையளிக்கப்பட்டன. ஆனால், உண்மையோ வேறு.
தமிழ் மத்தியதர வர்க்கத்தினர் அதிகம் புலம்பெயரும் ஆசையோடு அலைகின்றனர். ஏழை மக்களோ பொருளாதார சுமையை சுமக்க முடியாமல் தடுமாறுகின்றனர். தமிழ் சமூகத்தின் இளைய தலைமுறையின் எதிர்பார்ப்புகளோ பெரியளவில் மாறிவிட்டது. முள்ளிவாய்க்கால், இனப்படுகொலை, இன ஒடுக்குமுறை இவ்வாறான சொற்களின் வழியாக இன்றைய இளைய தலைமுறையை இனியும் திருப்திப்படுத்த முடியாது. இந்த விடயங்களைக் கருத்தில்கொண்டு வடக்கு, கிழக்கில் பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ் தலைமைகள் என்போர் சிந்தித்து செயலாற்ற வேண்டும்.
தேர்தலில் வெற்றிபெறுவதற்கான கூட்டுகள் தொடர்பில் சிந்திக்கும் கட்சிகள், வாக்களிக்கும் மக்கள் நம்பிக்கையுடன் நிலத்தில் வாழ்வதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான பொருளாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். தமிழ்க் கட்சிகளின் தலைமைகள் என்போர் அனைவருமாக ஒனறிணைந்து வடக்கு – கிழக்கில் உள்ள பொருளாதார சவால்கள் என்ன? – அதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம்? – அதற்கான ஒன்றிணைந்த வேலைத்திட்டம் என்ன என்பது பற்றி ஒருபோதும் சிந்தித்ததில்லை. இனியாவது சிந்திக்க முற்படுங்கள். நீங்கள் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவம் செய்வது உண்மையாயின்.