விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில போன்றவர்கள் அரசாங்கத்தை எதிர்க்க வேண்டும் – ஆனால், எதை வைத்து எதிர்ப்பது என்று தெரியாத நிலையில் அவ்வப்போது ஏதாவது ஒன்றைப் பேச முற்படுகின்றனர். அநுரகுமார திஸநாயக்க தலைமையிலான அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் ஓர் அரசாக இருப்பதாக விமல் வீரவன்ஸ தெரிவித்திருக்கின்றார்.
மகிந்த ராஜபக்ஷ காலத்தில் சிங்கள அடிப்படை வாதத்தின் ஊதுகுழல் போன்று தொழில்பட்டு வந்த வீரவன்ஸ, சரத் விஜயசேகர போன்றவர்கள் அண்மைக்காலமாக என்ன பேசுவதென்று தெரியாத நிலையில் இருக்கின்றனர். ஆனாலும் அரசியலில் தாங்களும் இருக்கின்றோம் என்பதைக் காண்பிக்க வேண்டும் என்னும் முனைப்பில் தொடர்பற்ற வகையில் அவ்வப்போது பேசுகின்றனர். இவ்வாறு பேசுபவர்கள் தமிழ்ச் சூழலிலும் இல்லாமல் இல்லை.
தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து வழக்கமான பாணி அரசியலை முன்னெடுப்பதில் சிலர் நெருக்கடியை சந்தித்திருக்கின்றனர். பெருமளவுக்கு அவர்கள் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாதளவுக்கு ஓரங்கட்டப்பட்டிருக்கின்றனர். விமல் வீரவன்ஸ, சரத் விஜயசேகர போன்றவர்கள் எல்லாக் காலத்திலும் தமிழர் விரோத அரசியலை முன்வைத்து சீவிக்கலாம் என்று எண்ணுபவர்கள். அவ்வாறானவர்கள் கொழும்பில் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணும் தமிழ் அரசியல் குழுக்களும் இல்லாமல் இல்லை.
இதன்மூலம், எதிரிக்கு எதிரி நண்பன் என்னும் வகையில் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கலாம் என்று கருதுபவர்களும் இருக்கின்றனர். ஆனால், அடிப்படையி;ல் இவ்வாறான எதிர்ப்பு அரசியல் போக்கால் எதனையும் இதுவரையில் இரண்டு தரப்புக்களுமே சாதிக்கவில்லை. மாறாக நாட்டை அதலபாதாளத்துக்கு தள்ளியதுதான் மிச்சம். தமிழர் பக்கத்தில் எதிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் எதிர்க்கப்படத்தான் வேண்டும். ஆனால், எதிர்க்க வேண்டிய – அழுத்தமாக வலியுறுத்த வேண்டிய விடயங்களை விட்டுவிட்டு வெறுமனே தேர்தல் அரசியலுக்குப் பயன்படக் கூடிய விடயங்களைக் கையில் எடுப்பதுதான் தவறானது.
உண்மையில், தமிழர் பக்கத்தில் எதிர்க்கப்பட வேண்டிய முக்கிய விடயம் மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் அரசாங்கம் பிற்போடுவதாகும் – இது வன்மையாக எதிர்க்கப்பட வேண்டும். அரசமைப்பிலுள்ள விடயங்களை அமுல்படுத்தப்படாமல் இருப்பது எதிர்க்கப்பட வேண்டும். ஆனால், தமிழ் மக்களுக்காக அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் கட்சிகள் எவையுமே இது பற்றிப் பேசவில்லை – அதற்காக வீதிக்கு இறங்கவில்லை. உண்மையில், அரசாங்கங்களின் அணுகுமுறை ஜனநாயக விரோதமானது – ஆனால், இது பற்றி பேசுவதற்கு – பிரத்தியேக எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தமிழ் கட்சிகள் தயாராக இல்லை.
தென்னிலங்கையில் சிங்கள மக்களின் நலன்களை முன்வைத்து அரசாங்கத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்று தெரியாமல் அடிப்படை வாதிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், மறுபுறமாக, தமிழ்ச் சூழலில், எந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தை எதிர்கொள்ள வேண்டுமோ, அந்த விடயங்களை விட்டுவிட்டு, ஏற்கனவே கட்டப்பட்ட விகாரைகள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மற்றவர்களை விடவும் தாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதைக் காண்பிக்க முற்படுகின்றனர். இந்த விடயத்தைத்தான் தமிழ் கட்சிகள் கச்சிதமாக பற்றிக் கொள்ள வேண்டும். முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி, அதன் முழுமையான இயங்கு நிலைக்கு வழிவகுக்க வேண்டும் என்னும் குரலை தமிழ் கட்சிகள் முன்வைக்க வேண்டும்.