40,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 37,000 மெட்ரிக் தொன் பெட்ரோலுடன் இரண்டு கப்பல்கள் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
எரிபொருள் விநியோக நடவடிக்கை தொடர்ந்து இடம்பெறுவதாகவும், விவசாய நடவடிக்கைகளுக்காக உரிய அதிகாரிகளின் பரிந்துரைகளின் கீழ் டீசல் வழங்கப்படுவதாகவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
போத்தல்கள் மற்றும் கலன்களில் எரிபொருளை வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கலன்களில் எரிபொருளைக் கொள்வனவு செய்து அவற்றை வெளியிடங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தடை இன்றி எரிபொருளை வழங்கும் நோக்கோடு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கும், விற்பனை செய்வோருக்கும் எதிராக பொலிசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.