எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மாதிரிகளை பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

0
164

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களினால் விநியோகிக்கப்படும் எரிபொருளின் தரம் குறித்து பரிசோதிப்பதற்காக, மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆலோசகர் சிரில் சுதுவெல்ல தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில், எழுமாறாக தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவ்வாறு மாதிரிகளைப் பெற்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், பெற்றோல் விநியோகத்தில் மோசடியில் ஈடுபட்ட கொழும்பு -7 இல் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையத்தின், மூன்று எரிபொருள் விநியோக இயந்திரங்களில் இரண்டு அரச முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளன.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, அளவை மற்றும் நிறுவைகள் திணைக்களம், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகம் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள ஒக்டேன் 92 ரக பெற்றோலை விநியோகிக்கும் மூன்றில், இரண்டு இயந்திரங்கள் ஊடாக உரிய கட்டணத்துக்கான அளவை விட குறைவாக பெற்றோல் விநியோகித்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இரு எரிபொருள் விநியோக இயந்திரங்கள் ஊடாக ஒரு லீற்றருக்கு 1.2 சதவீதம் குறைவாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றருக்கு 5 ரூபா 40 சதம் என்ற அடிப்படையில் குறைந்த அளவில் பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த எரிபொருள் விநியோக இயந்திரங்கள் அரச முத்திரையிட்டு மூடப்பட்டுள்ளதாக ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.