இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் இன் 17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளநிலையில், அதற்கு முன்னதாக சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ந்தேதி துபாயில் நடக்க உள்ளதாக ஐ.பி.எல். அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 26-ந்தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் குஜராத்தை தோற்கடித்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது கோப்பையை வென்று அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது.
இந்நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி ஏலத்திற்கு முன்பாக இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் சென்னை நிர்வாகம் ரூ. 16.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகையில் ஸ்டோக்ஸை வாங்கியது. ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டால் ரூ.16.25 கோடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையிருப்பில் சேர்ந்து விடும். அதனை ஏலத்தில் பயன்படுத்தி வேறு சில வீரர்களை வாங்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.