ஐ.நாவில் தமிழர் எதிர்பார்ப்பு கைகூடுமா அல்லது இருப்பதும் கைநழுவுமா?

0
296

ஜெனிவா அரங்கை கையாளுவது தொடர்பில் பிரதான கட்சிகள் அனைத்தும் இணைந்திருப்பதாகவும் – ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பில் சில சந்திப்புக்களும் இடம்பெற்றிருந்தன. இதனைத் தொடர்ந்து கூட்டமைப்பு, முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்களின் கையெழுத்துடன் ஜ.நா- மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு அறிக்கையொன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதே வேளை, இதே போன்று மேலும் இரண்டு கடிதங்களை அனுப்புவதற்கான உடன்பாடு காணப்பட்டிருப்பதாகவும் தற்போது கூறப்படுகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் எவ்வாறானதொரு பிரேரணையை முன்வைப்பதென்னும் முடிவு கிட்டத்தட்ட பழம் கதையாகிருக்கலாம்.

தற்போது வெளியாகியிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை அதற்கான சான்றாகும். தற்போது வெளியாகியுள்ள அறிக்கையில் முதல் முதலாக சர்வதேச குற்றவியில் நீதிமன்றம் தொடர்பான பரிந்துரை இடம்பெற்றிருக்கின்றது. அதே வேளை ஏனைய சில பரிந்துரைகளையும் ஆணையாளர் முன்வைத்திருக்கின்றார். மனித உரிமைகள் பேரவையானது, மனித உரிமைகளை பாதுகாப்பதில் பக்கச்சார்பற்ற வகையிலும் நேர்மையாகவும் இருக்கின்றது – என்பதை காண்பிக்கும் வகையிலேயே ஆணையாளரின் அறிக்கை அமைந்திருக்கின்றது. ஆனால் இந்த பரிந்துரைகளில் எதனை ஏற்றுக் கொள்ளலாம் – எதனை நிராகரிக்கலாம் என்பதை இணைத் தலைமை நாடுகளே தீர்மானிக்கும். நிச்சயம் ஆணையாளரின் அனைத்து பரிந்துரைகளையும் இணைத் தலைமை நாடுகள் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் இணைத் தலைமை நாடுகள் இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை முன்வைக்கும் போது, உறுப்பு நாடுகள் அதனை அதிகம் எதிர்க்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்களின் நலன்களிலிருந்தே விடயங்களை நிறுத்துப்பார்க்கும். இதுவரையில் இந்த அடிப்படையில்தான் இலங்கை விவகாரம் கையாளப்பட்டு வந்திருக்கின்றது.

தமிழ்ச் சூழலை திரும்பிப் பார்த்தால் நமக்கு தெரியும் காட்சிகளோ வேறு. அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் பொது வெளியில் தனிப்பட்ட ரீதியில் மோதிக்கொண்டமையானது தமிழ் அரசியல் எந்தளவிற்கு தரம்தாழ்ந்து செல்கின்றது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஜ.நாவிற்கான ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டுவிடடு, கையெழுத்திட்டிருக்கும் கட்சிகள் தொடர்பில் பொது வெளியில் மோதிக் கொள்வதானது, குறித்த ஆவணத்திலும் இவர்கள் எவருமே உண்மையாக இருக்கவில்லையென்பதையே காண்பிக்கின்றது. ஏனெனில் குறித்த ஆவணத்தில் கூட்டமைப்பு, முன்னணி மற்றும் விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர்கள் கையெழுத்திட்டிருக்கின்றனர். விக்கினேஸ்வரன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரனின் கட்சியில்தான் போட்டியிட்டிருந்தார். தற்போது அதன் பெயர் மாற்றப்பட்டிருந்தாலும் அடிப்படையில் அது ஈ.பி.ஆர்.எல்.எப் தான்.

பதிவு செய்யப்பட்ட கட்சிகள் என்று நோக்கினால், இலங்கை தமிழரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் சார்பிலேயே கையெழுத்திடப்பட்டிருக்கின்றது. தற்போது குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்ட தலைவர்களில் ஒருவரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏனையவர்களை கடுமையாக தாக்கியிருக்கின்றார். அவர் பயன்படுத்தியிருக்கும் சொற்களை நாகரீகம் கருதி இங்கு நான் பயன்படுத்தவில்லை. சம்பந்தனோடு இணைந்து, சுரேஸ் பிரேமச்சந்திரன் விடுதலைப் போராட்டத்தை காட்டிக்கொடுத்ததாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றார். ஆனால் அதே சம்பந்தனோடு இணைந்துதான் குறித்த ஆவணத்தில் கையெழுத்திட்டிருக்கின்றார். குறித்த ஆவணத்தில் சுரேஸ்பிரேமச்சந்திரனின் கட்சியின் சார்பில்தான் விக்கினேஸ்வரன் கையெழுத்திட்டிருக்கின்றார். அவ்வாறாயின் தவறானவர்களோடு எதற்காக கஜேந்திரகுமார் இணைய வேண்டும்? அதே வேளை மேலும் இரண்டு ஆவணங்களை ஜ.நாவிற்கு அனுப்பவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அந்த ஆவணத்திலும் இந்த தவறானவர்களோடுதானே கஜேந்திரகுமார் இணைய வேண்டியிருக்கின்றது.

இங்கு ஒரு விடயம் கண்கூடு. அதவாது, ஒவ்வொரு கட்சிகளும் ஜெனிவா விவகாரத்துடன் தங்களின் தேர்தல் நலன்களையும் இணைத்தே சிந்திக்கின்றனர். ஆனால் ஒப்பீட்டடிப்படையில், இதில் கூட்டமைப்பு நேர்மையாக நடந்து கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. கூட்டமைப்பு அதன் தோல்வி அனுபவங்களிலுருந்து, ஓரளவாவது பாடங்களை கற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. உண்மையில் சுமந்திரனின் தலைமையில் கூட்டமைப்பு தனியான ஆவணமொன்றை தயார் செய்து அணுப்பியிருக்கலாம். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருக்கும் ஒரு பிரதான கட்சியென்னும் வகையில் அதனையே ராஜதந்திர சமூகம் முக்கியமாக நோக்கியிருக்கும். ஒரு வேளை கூட்டமைப்பு தனியானதொரு ஆவணத்தை அனுப்பியிருந்தால், கஜேந்திரகுமார் மற்றும் விக்கினேஸ்வரனின் வாதங்கள் பயனற்றவையாகியிருக்கும். இந்த பின்புலத்தில் நோக்கினால் கூட்டமைப்புடன் இணைந்து நிற்பதால்தான் கஜேந்திரகுமாரின் கருத்துக்களுக்கும் ஒரு பெறுமதி கிடைத்திருக்கின்றது. அதே வேளை அரசியல்வாதிகளை கையாளும் திறன் சிவில் சமூக அமைப்புக்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு இல்லையென்பதும் தற்போது தெளிவாகியிருக்கின்றது. சிவில் சமூகமென்னும் பெயரில் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்களில் நம்பகத்தன்மையும் இங்கு கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. பொது வெளியில் அரசியல்வாதிகள் ஜெனிவா விவகாரத்தை வைத்து மோதிக்கொள்ளும் போது, அவர்களை அடக்கும் ஆளுமை சிவில் சமூகத்திடமிருந்து வெளிப்படவில்லை.

மீண்டும் ஜெனிவா விவகாரத்திற்கு வருவோம். ஆணையாளரின் அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் குறிப்பிட்டிருப்பது பற்றி, தமிழ்ச் சூழலில் ஒரு வகையான புளகாங்கிதத்தை காண முடிகின்றது. ஒவ்வொருவரும் இதனை தங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகவும் காண்பித்துக் கொள்ளக்கூடும். தாம் மட்டுமே இது தொடர்பில் உறுதியாக இருந்ததாகவும் – தற்போது தாங்கள் கூறிவந்த விடயம் நடந்திருக்கிறதென்றும் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார். தேர்தலொன்று வருகின்ற போது, இதனை தங்களின் வெற்றியாகவும் அவர்கள் காண்பித்துக்கொள்ளலாம். உண்மையில் இந்த விடயத்தை சரியாக புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். புளகாங்கிதம் கொள்ளுமளவிற்கு இங்கு எதுவும் நடைபெற்றுவிடவில்லை. அரசியல்வாதிகள் மத்தியிலும் – சிவில் சமூகமாக தங்களை காண்பித்துக்கொள்பவர்கள் மத்தியிலும் விடயங்களை விமர்சனபூர்வமாகவும் ஆழமாகவும் பார்க்கும் போக்கில்லை. ஒரு விடயத்தை நாங்கள் செய்திருக்கின்றோம், என்பதை காண்பிக்க வேண்டுமென்னும் அவசரம் மட்டுமே தெரிகின்றது. நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, ஆணையாளரின் அறிக்கை வெறும் பரிந்துரைகள் மட்டுமே. அந்த பரிந்துரைகளுக்கான பெறுமதியை உறுப்பு நாடுகளே வழங்கும். அதே வேளை இவ்வாறானதொரு கடுமையான அறிக்கை வெளியிடப்பட்டமைக்கு கோட்டபாய அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடுகளே காரணம். உதாரணமாக, அரசாங்கம் முன்னைய ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டிருந்த பிரேரணையை பரீசிலிக்கத் தயார் – அதற்கும் சிறிது காலம் அவகாசம் தேவையென்னும் ஒரு நிலைப்பாட்டை முன்வைத்திருந்தால் ஆணையாளரின் அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை தமிழர்கள் பாத்திருக்க முடியாது. ஏனெனில் குறித்த அறிக்கையில், முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை ஆணையாளர் பாராட்டியிருக்கின்றார். எனவே தற்போது அறிக்கை கடுமையாக இருப்பதற்கு எது – யார் காரணம்? முக்கியமாக – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் பேசப்பட்டதற்கு சில குழுக்களின் உழைப்பு காரணமா அல்லது கோட்டபாய அரசாங்கத்தின் கடும்போக்கான நிலைப்பாடுகள் காரணமா?

இன்று நிலைமைகளை ஆராய்ந்தால் – ஜெனிவா அரங்கு மீளவும் தமிழர்களுக்கு சாதகமாக தெரிகின்றது. இதற்கு பின்னால் இருப்பது இரண்டு காரணங்கள்தான் – ஒன்று, இலங்கையில் மீளவும் ராஜபக்சக்கள் ஆட்சியை கைப்பற்றியிருக்கின்றனர். இரண்டு, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால் ரம் தோல்வியடைந்திருக்கின்றார். ஒரு வேளை பைடன் வெற்றிபெறாது போயிருந்தால், ஜ.நா தொடர்பில் மீளவும் தமிழ்பரப்பில் நம்பிக்கை துளிர்விட்டிருக்காது. ஏனெனில் ரம் நிர்வாகம் ஜ.நாவுடன் கடுமையான மோதல் போக்கையே கடைப்பிடித்துவந்தது. எனவே இங்கு விளங்கிக்கொள்ள வேண்டிய உலகப்பரப்பில் நிகழும் சில விடயங்களும் – உள்நாட்டு நிலைமைகளும் சில இடங்களில் முரண்படும்போது – அது எங்களுக்கான வாய்ப்புக்களாகத் தெரிகின்றது. ஆனால் இவை எவையும் நிரந்தரமாக எங்களை பின்தொடரப் போவதில்லை. உலக நிலைமைகள் மாறும் போது எங்களுக்கான வாய்ப்புகளும் கைநழுவிப்போய்விடும். எனவே கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்;ப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு, எவ்வாறு இருப்பதை பாதுகாத்துக் கொண்டு, முன்நோக்கி பயணிக்கலாமென்று சிந்திப்பதுதான் புத்திசாதுர்யமானது.

அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இருப்பதால், அதுவொன்றும் பெரிய வரப்பிரசாதமல்ல. ஏனெனில் ஒரு வேளை, சர்வதேச குற்றவில் நீதிமன்றத்தை நோக்கி இலங்கை விவகாரம் சென்றாலும் கூட, அது ஒரு நீண்டகால விவகாரம். அதே வேளை முடிவு எங்களுக்கு சாதகமாக வருமென்பதற்கும் எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஒரு பேச்சிற்கு, குற்றவியல் நீதிமன்றத்தின் மூலம் சிலருக்கு எதிராக தீர்ப்பு வந்தாலும் கூட, அவ்வாறானவர்கள் பலர் அப்போது உயிருடன் இருக்கப் போவதில்லை. அதன் பின்னர் யாரை தண்டிப்பது? வேண்டுமானால், வரலாற்று நூல்களில் பதிவாக இருக்கலாம். ஆனால் இந்தக் காலத்தில் வடக்கு கிழக்கின் தமிழ் பகுதிகள் மேலும் பலவீனமடைந்திருக்கும். வசதியுள்ள மக்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியிருப்பர். ஏனெனில் இந்த விடயங்களை துல்லியமாக கணித்தே அரசாங்கம் விவகாரங்களை கையாளுகின்றது. தற்போது 70 வயதை கடந்திருக்கும் கோட்டபாய ராஜபக்சவும், 75 வயதை கடந்திருக்கும், மகிந்த ராஜபக்சவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பில் அலட்டிக்கொள்ளப்போவதில்லை.

இலங்கை விவகாரத்தை மனித உரிமைகள் பேரவையிலிருந்து வெளியில் கொண்டுசெல்ல வேண்டுமென்று சிலர் வாதிடுகின்றனர். ஆனால் அதன் பின்னர் எவ்வாறு, தமிழர் விகாரத்தை ஜ.நாவில் தக்கவைப்பது – என்பதற்கு தெளிவான பதிலோ வேலைத்திட்டமோ எவரிடமும் இல்லை. தமிழர் தரப்பு தற்போது சிரிய விவகாரத்தை கையாளுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஏற்பாடான ஐஐஐஆ எனப்படும் வுhந ஐவெநசயெவழையெடஇ ஐஅpயசவயைட யனெ ஐனெநிநனெநவெ ஆநஉhயnளைஅ ஏற்பாட்டை இலங்கை விவகாரத்திற்கு பரிந்துரைத்திருக்கின்றனர். இதன் மூலம் இலங்கை விவகாரத்தை மனித உரிமைகள் பேரவையிலிருந்து, ஐ.நா பொதுச் சபைக்கு பாரப்படுத்த வேண்டுமென்பதே இந்த பரிந்துரையின் அடிப்படையான நோக்கம். ஆனால் ஐ.நா.பொதுச் சபையில் இந்த விடயத்தை கையாளுவதென்பது இலகுவான விடயமல்ல. தமிழர் விவகாரம் முற்றிலும் கைவிடப்படும் ஆபத்துமுண்டு. ஏனெனில் ஒரு விசேட ஏற்பாட்டை பொதுச் சபையின் மூலம் உருவாக்க வேண்டுமாயின், பொதுச் சபையில் இதற்கென பிரேரணையொன்றை முன்வைத்து அதனை வாக்கெடுப்பில் வெற்றிகொள்ள வேண்டும். தற்போதுள்ள உறுப்புநாடுகளில் 50 வீதமான நாடுகளின் ஆதரவை பெறவேண்டும். இது தமிழ்களால் இயலுமா? மேலும் பொதுச் சபைக்கு விடயம் கொண்டு செல்லப்படும் போது, விடயத்தை கையாளுவதற்கான வாய்ப்பு அரசாங்கத்திற்கு அதிகம் சாதகமாக இருக்கும். இன்று இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றவர்கள் அனைவரும் இந்த விடயங்களை துல்லியமாக அறிந்துதான் பேசுகின்றனரா அல்லது தாங்களும் பேச வேண்டுமென்பதற்காக பேசுகின்றனரா?
ஓட்டுமொத்தமாக நோக்கினால் ஜெனிவா விவகாரத்தில் ஒவ்வொருவரும் தங்களின் பாண்டியத்தை காண்பிக்கப் போய், இறுதியில் ஓரளவு தமிழருக்கு சாதகமாக இருக்கின்ற நிலைமையும் இல்லாது போய்விடுமோ!

யதீந்திரா