பங்களாதேஷூக்கு எதிரான மூன்றாவதும் கடைசியுமான போட்டியில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணி, ஒருநாள் தொடரை 3 – 0 என முழுமையாக கைப்பற்றியது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி – 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1 – 1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் இரு ஆட்டங்களிலும் மேற்கு இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இதில், முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது . இதனால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 321 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியில் மஹ்மதுல்லா 84 ஓட்டங்களும், மெஹதி ஹசன் 77 ஓட்டங்களும், சவுமியா சர்கார் 73 ஓட்டங்களும் எடுத்தனர். தொடர்ந்து 322 ஓட்டங்கள் என்ற இலக்குடன் மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாடியது .
அந்த அணியின் துடுப்பாட்ட வீரர்கள் பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் . கீசி கார்டி, அமீர் ஜாங்கு ஆகியோர் பந்துகளை பௌண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறக்க விட்டனர்.
இறுதியில் 45. 5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 325 ஓட்டங்கள் எடுத்து மேற்கு இந்திய தீவுகள் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமீர் ஜாங்கு சதமடித்து அசத்தினார்.

கீசி கார்டி 95 ஓட்டங்கள் எடுத்தார். இந்த வெற்றியால் ஒருநாள் தொடரை 3 – 0 என முழுமையாக மேற்கு இந்திய தீவுகள் அணி கைப்பற்றியது.