ஒரு இறாத்தல் பாணை 300 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும் என்பது பொருளாதார நெருக்கடியின் தீவிர தன்மையாகும் – ஜே.சி.அலவத்துவல எம்.பி

0
135

நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் முதல் தடவையாக வங்குரோத்து நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (3) காலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிளை எதிர்கொண்டுள்ளனர்.

ஒரு இறாத்தல் பாணை 300 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டும் என்பதே அதன் தீவிர நிலைமையாக காணப்படுகின்றது.

பொருட்களின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப நாட்டு மக்களின் வாழ்வாதாரம் அதிகரித்து விட்டதா என்றே நாம் அரசாங்கத்தை கேட்கின்றோம்.

நாட்டு மக்களின் வாழ்வாதாரம் இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

எனவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குடும்ப ஆட்சி, அதற்கு உதவிய அதிகாரிகள் இணைந்தே நாட்டில் இன்று துரதிஷ்டமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளனர்.

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பின்பு இந்த நாட்டை ஆட்சியாளர்கள் வேண்டுமென்று வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்று மத்திய வங்கி ஆளுநருடனான சந்திப்பின்போது எமக்கு தெரிவிக்கப்பட்டது.

69 இலட்சம் மக்கள் வாக்களித்து தெரிவு செய்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

69 இலட்சம் மக்கள் வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொண்ட அவர், அந்த அதிகாரமும் போதாது என்று கூறி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற்றுக்கொண்டு 19ஆவது திருத்தத்தை நீக்கி 20 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தியதனூடாக நிறைவேற்று அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டர்.

இவ்வாறான அதிகாரங்களை பெற்றுக்கொண்ட அவர் கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி நாட்டை விட்டு செல்லும்போது நாடு எவ்வாறான நிலைமையை எதிர்கொண்டு இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.

மக்களால் மூன்று வேளையும் உணவு உட்கொள்ள முடியாத நிலைமைக்கு நாடு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஒரு வேளை உணவை உண்ண முடியாதளவு ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.

அவ்வாறான ஒரு நிலைமைக்கு இன்று இந்த நாட்டை கொண்டு வந்துள்ளனர்.