தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்குமான புரிந்துணர்வு உடன்பாடு நேற்றைய தினம் தந்தை செல்வா கலையரங் கில் கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்பாடு கைச்சாத்திடப்படுமா – கைவிடப்படுமா அல்லது அனைத்து கட்சிகளும் கைச்சாத்திடுமா அல்லது இடையில் சிலர் விலகி விடுவார்களா – இப்படியான பல கேள்விகளுக்கு மத்தியில் இந்த விடயம் நிகழ்ந்து முடிந்திருக்கின்றது.
முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களில் நடைபெற்ற முக்கியமானதோர் அரசியல் நகர்வாக இதனைக் கருதமுடியும். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் செயல்பட்டு வரும் பலவாறான கட்சிகளை ஒரு நேர்கோட்டில் சந்திக்கச் செய்ய வேண்டும் என்னும் முயற்சி பெரியளவில் வெற்றி பெறவில்லை. கடந்த பதி னைந்து ஆண்டுகளில் பலர், பல்வேறு சந்தர்ப்பங்களில் – பலவாறான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும்கூட கட்சிகள் அனைத்தையும் ஒரு நேர்கோட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. இப்போதும் அனைத்து கட்சிகளும் ஓரிடத்தை நோக்கி வரவில்லை. ஆனால், ஒப்பீட்டு அடிப்படையில் பெரும்பாலான கட்சிகள் உடன்படிக் கையில் இணைந்திருக்கின்றன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி உடன் பாட்டுக்குள் வரவில்லையாயினும்கூட, தமிழ் அரசுக் கட்சிக்குள் ஒரு பகுதியினர் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர். தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் தமிழ் மக்கள் அமைப்புகளும் தமிழ்த் தேசிய நிலைப்பாடுடைய கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது என்பது முற்றிலும் புதியது. அதேவேளை, ஒப்பீட்டடிப்படையில் முன்னேற்றகரமானது – அவசியமானது. முள்ளிவாய்க்காலுக்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் சூழல் என்பது வெறுமனே அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்திருக்கவில்லை. அப்படியான அரசியல் நகர்வு பொருத்தமானதாகவும் இருந்திருக்கவில்லை.
அதற்கு மாறாக, அரசியல் கட்சிகளும் அரசியல் விழிப்புள்ள சிவில் சமூக அமைப்புகளும் ஒன்றுபட்டு செயல்படுவதற்கான தேவையே மேலோங்கியிருந்தது. அதாவது, ஓர் அரசியல் சமூகமென்னும் அடிப்படையில் அனைவ ரும் ஓரணியாக வேண்டியிருந்தது – ஓர் இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டியிருந்தது. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு – கிழக்கில் அதிக பாராளுமன்ற ஆசனங்களை கொண்டிருந்தமையாலும் தொடர்ந்தும், நமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வந்த நிலையிலும் – அவர்களால் – குறிப்பாக, இலங்கை தமிழ் அரசுக் கட்சியால் ஓர் அரசியல் சமூகத்தின் அங்கமாக சிந்திக்க முடிந்திருக்கவில்லை. ஒரு தேசமாக தமிழ் மக்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தபோது ஓர் அரசியல் சமூகமாக திரள வேண்டியதே முதலாவதும் – அடிப்படையா னதுமான நகர்வாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அது நிகழ வில்லை.
ஏனெனில், அரசியல் என்பது அதிகாரத்தைக் கைப்பற்றுவதற் கான ஒரு சண்டை. எவ்வாறான அரசியல் நகர்வுகளை மேற்கொண்ட போதிலும் இறுதியில் குறித்த நகர்வால் எதை அடைந்தோம் என்னும் கேள்வியே எஞ்சியிருக்கும். அந்தக் கேள்விக்கான பதிலை காண்பிப்ப தில் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்த வாறே நகர்கின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஜனாதிபதித் தேர்தலை ஒரு முதல் இலக்காகக் கொண்டு பெரும்பாலான கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளால் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபையும் ஓர் அரசியல் சமூகமென்னும் வகையில் ஒரு புரிந்துணர்வில் கலந்திருக்கின்றனர்.
இது ஓர் ஆரம்ப நகர்வு மட்டுமே. அடுத்த கட்டமாக சின்னம் மற்றும் வேட்பாளர் தொடர்பிலும் விரைந்து முடிவுகளை மேற்கொள்ள வேண் டும். இது ஒரு முன்னுதாரணமான முயற்சி – இதனை அத்திபாரமாகக் கொண்டு தமிழ் மக்களுக்கான ஜனநாயக அரசியலை செழுமைப்படுத்த வேண்டும்.