மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கடந்த ஒருவாரகாலத்தில் 32 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்களது பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஓட்டமாவடி பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் நடைபெற்ற கொவிட்-19 செயலணி கூட்டத்திலேயே இம்முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில்
ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், உன்னிச்சை இராணுவ முகாம் மேஜர் அனுஷ்கா விஜயதாச, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிவநாதன், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், ஓட்டமாவடி வர்த்தக சங்க பிரதிநிதிகள், ஓட்டமாவடி மற்றும் மீறாவோடை பள்ளிவாயல்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களின் நலனை கருத்திற் கொண்டு ஓட்டமாவடி பஸாரை அல்லது பிரதேசத்தை தனிமை படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்துவதில்லை என்றும் வர்த்தகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டால் பதினான்கு நாட்களுக்கு குறித்த வர்த்தக நிலையத்தை மூடுவது என்றும், முககவசம் அணியாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வது என்றும், வர்த்தக நிலையங்களுக்கு சிறு பிள்ளைகளை அழைத்து வருவதற்கு தடை விதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இதே வேளை ஓட்டமாவடி பகுதியில் சீனிப்போடியார் வீதி மட்டும் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு அவ் வீதி மாத்திரம் மூடப்பட்டுள்ளதுடன்; ஏற்கனவே மூடப்பட்ட அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.