ஓய்வுபெறவுள்ள 25,000 அரச ஊழியர்கள்: அரச பணியில் பாதிப்பு ஏற்படுமா?
டிசம்பர் 31ம் திகதிக்கு பின்பு 60 வயதை எட்டிய அரச ஊழியர்கள் ஓய்வு பெறுவதால் அரசாங்க பணியில் வீழ்ச்சி ஏற்படும் என பெரும்பாலான அரச தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னேவிடம் வினவிய போது, ‘ஆண்டு தோறும் சராசரியாக 18,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். இம்முறை மாத்திரம் சுமார் 25,000 அரச ஊழியர்கள் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளனர்’ எனவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அரச சேவையின் செயற்பாட்டிற்கு இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறப்படுகிறது. ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும், அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டு, பயிற்சி முடித்தவர்களும் அரச சேவையில் இணைகின்றனர். குறிப்பிட்ட சில பதவிகளில் உள்ள வெற்றிடங்களுக்கு குறைந்த தரத்திலான தகுதி வாய்ந்த அதிகாரிகளும் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 வயதைப் பூர்த்தி செய்த அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு பிரதமர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நேற்று வெளியிடப்பட்டது. இது தொடர்பான உத்தரவு ஜனவரி முதலாம் திகதி முதல் அமலுக்கு வர வேண்டும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.