மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்தியாவில் இடம்பெற்ற சிந்தனைக்கூட நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றார்.
இதன்போது, வடக்கு, கிழக்கில் சீனாவை தமிழ் மக்கள் வரவேற்கவில்லை, இந்தியாவின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, நாங்கள் அதனை
ஆதரிக்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
இவ்வாறு குறிப்பிடுவதால், இந்தியா மகிழ்ச்சியடையுமென்று சாணக்கியன் எண்ணியிருக்கலாம்போலும் – அவ்வாறு எண்ணினால் அது நகைப்புக்கிடமானது.
ஏனெனில், சீனாவை எதிர்கொள்வது என்பது வெறுமனே பேசுவதல்ல – முதலில் இந்தியா கருத்தில்கொள்ளத்தக்க வலுவானதொரு கட்சியாக பரிணமிக்க வேண்டும்.
ஒரு பலமான ஐக்கிய முன்னணியாவதற்கான ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் – அதன் பின்னர்தான் இவ்வாறான அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
ஆனால், நடப்பது என்ன? – இலங்கை தமிழ் அரசு கட்சியின் உள் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது.
ஒருவேளை தலைமைக்கான வாக்கெடுப்பில் சிறீதரன் தோல்வியடைந்திருந்தால் கட்சியின் யாப்பு தொடர்பான விவாதம் இடம்பெற்றிருக்காது – ஏனெனில், யாப்பில் உள்ள குளறுபடிகள் தெரிந்தே அனைவரும் தேர்தல் மூலமான முடிவை எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால், சிறீதரன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தற்போது கட்சியின் யாப்பு தொடர்பில் பேசப்படுகின்றது.
சாணக்கியனால் அவர் பிரதிநிதித்துப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே தமிழ் அரசு கட்சியின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவைத் தக்கவைக்க
முடியில்லை – இவ்வாறான ஒருவர், வடக்கு, கிழக்கில் சீனாவை எதிர்கொள்வது பற்றி பேசுவதை நகைச்சுவையாகவே நோக்க முடியும்.
தமிழ்த் தேசிய அரசியலின் நிலைமை ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை’யாகி வருகின்றது.
2009இல் யுத்தம் நிறைவுற்றபோது – யுத்தத்தின் போது இடம்பெற்றதாக நம்பப்படும் மனித உரிமைகள் மீறலும் அதன் மீதான சர்வதேச அழுத்தங்களுமே – ஒரேயொரு நம்பிக்கையாக இருந்தது.
ஆனால், 14 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்று அனைத்து முயற்சிகளுமே புஷ்வாணமாகிவிட்டதா என்னும் கேள்வியுடனேயே அரசியல் ஊசலாடிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் சீனாவை எதிர்கொள்ளப் போவதாக கூறுவதை என்னவென்பது? தமிழ் மக்கள் அடிப்படையிலேயே சிந்திக்கத் தெரியாதவர்கள் என்றா நமது அரசியல்
வாதிகள் எண்ணுகின்றனர்? இலங்கைத் தமிழ் அரசு கட்சியில் புதியவர்களை உள்வாங்க வேண்டும் – அது அவசியமானதும்கூட ஆனால், அவ்வாறு புதியவர்களை உள்வாங்கும்போது நேர்த்தியான ஒழுங்குகள் பின்பற்றப்பட வேண்டும்.
ஆனால் அது பின்பற்றப்படவில்லை.
இன்று ஏற்பட்டிருக்கும் பல குழப்பங்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
தமிழ்த் தேசியம் தொடர்பில் பேசிக் கொண்டாலும்கூட, தமிழத் தேசியத்தின் அடிப்படையில் புதியவர்கள் உள்வாங்கப்படவில்லை.
இது யாருடைய குற்றம்? கட்சியின் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தியவர்களே பிரதான குற்றவாளிகளாவர்.
முதல் குற்றவாளி இரா. சம்பந்தன் என்றால் – அடுத்த குற்றவாளி மாவை. சேனாதிராசா ஆவார்.
நிதிபலமுள்ளவர்கள் எவர் வேண்டுமனாலும் கட்சிக்குள் வரலாம் – அவ்வாறானவர்கள் கட்சியின் மூத்த தலைவர்களின் கதவுகளை தட்டினால், அது தாராளமாகவே
திறக்கும் என்னும் கணிப்பே இன்று தமிழ் அரசு கட்சி தொடர்பில் நிலவுகின்றது.
சாணக்கியன் போன்றவர்களை உள்வாங்கும் போது, தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூத்த உறுப்பினர்களின் கரிசனைகள் கருத்தில் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இன்று தமிழ் அரசு கட்சியின் பிரச்னை நீதிமன்றம் சென்றமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணமாகும்.
முதலில் கட்சியின் ஆற்றலை நிரூபியுங்கள் – தமிழ்த் தேசியத்தின் பெயரால் சிதறி – மோதிக் கொண்டிருக்கும் கட்சிகள் அனைத்தையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவாருங்கள் – அதன் பின்னர் சர்வதேச விடயங்கள் தொடர்பில் கவனிக்கலாம்.