கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி; பிரதமராகும் மார்க் கார்னி!

0
11

கனடாவில் 2015ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை இராஜினாமா செய்தார். 

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதையடுத்து கனடா மீதான வரியை அதிரடியாக அதிகரித்தார். உள்நாட்டு அரசியல் பிரச்சினை, டிரம்ப் வரி விதிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் லிபரல் கட்சியை சேர்ந்த ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த மாதம் 14 ஆம் திகதி கனடாவின் 24 ஆவது பிரதமராக பதவியேற்றார்.

கனடா  பாராளுமன்றத்தின் பதவிகாலம் வரும் அக்டோபர் மாதம் வரை இருக்கும் நிலையில் பிரதமர் மார்க் கார்னி நாடாளுமன்றத்தை கலைத்தார். 

மேலும், பாராளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மார்க் கார்னி அழைப்பு விடுத்தார். அதன்படி, ஏப்ரல் 28ம் தேதி கனடா நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

 இதையடுத்து, லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னி களமிறங்கினார். கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ் பிரதமர் வேட்பாளாரக களமிறங்கினார். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் ஆரம்பத்திலே  லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இந்தத் தோ்தலில், லிபரல் கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று கனடா செய்து நிறுவனம் ‘சிபிசி’ அறிவித்துள்ளது. 

எனினும், தனி பெரும்பான்மையுடன் அக்கட்சி அரசு அமைக்குமா என்பது இன்றிரவு வெளியாகும் தேர்தல் முடிவுக்குப் பின்னரே தெரிய வரும்.