களுத்துறையில் உள்ள ஐந்து மாடி விடுதி ஒன்றில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 16 வயது மாணவியின் மரணம் தொடர்பிலான அரச பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கப்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த மாணவி மது அருந்தியிருந்தாரா? இல்லையா? என்பது தொடர்பில் அந்த அறிக்கை ஊடாக அறிந்துக் கொள்ள முடியும் என களுத்துறைக்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.அத்துடன் உயிரிழந்த மாணவியின் கையடக்க தொலைபேசியை கண்டுபிடிப்பதற்காக, கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், இதுவரை அந்த கையடக்க தொலைபேசி கிடைக்கப்பெறவில்லை. அவரது கையடக்க தொலைபேசியை களுகங்கையில் எறிந்ததாக, கைது செய்யப்பட்டுள்ளவர்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த பகுதியில் தேடுதல்கள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேநேரம், குறித்த 16 வயதுடைய பாடசாலை மாணவி, பிரதான சந்தேகநபருக்கு விற்பனை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தமது நண்பியுடன் விருந்தகத்துக்கு சென்றிருந்த 22 வயதான இளைஞர், குறித்த 16 வயது, மாணவியை 20 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ய ஆலோசனை கூறியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.அத்துடன் குறித்த 22 வயதுடைய இளைஞன், பிரதான சந்தேக நபருடன், 16 வயது மாணவியை தொடர்புபடுத்தியமைக்காக, 20ஆயிரம் ரூபா தொகையில் ஒரு பகுதியை பெற்றுள்ளார் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்