கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட உள்ளிட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கண்டனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஊடக அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த இந்தப் போராட்டம் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பு இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமானது.
உழைக்கும் ஊடக தொழில்சங்க சம்மேளனம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் ஆகியவை இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.
இந்தப் போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, ‘காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும்’, ‘சர்வதேசமே பதில் சொல்’, ‘காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கே?’, ‘படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடு’ போன்ற கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.