காணாமல் போனதாக கூறப்பட்ட நபர் சடலமாக மீட்பு!

0
9

எல்பிட்டிய, தெமடகஹகந்த, நவ்தகல பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காணாமல் போன நிலையில் நேற்று (06) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.42 வயதுடைய இந்த நபர் காணாமல் போனமை தொடர்பாக கடந்த மாதம் 14 ஆம் திகதி எல்பிட்டிய காவல் நிலையத்தில் அவரது மனைவி செய்த புகாரைத் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

தெமடகஹகந்த பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் வீசப்பட்டு மண்ணால் மூடப்பட்ட நிலையில் காணாமல் போனவரின் சடலம் நேற்று (06) காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட காணியின் உரிமையாளரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காகப் போடப்பட்ட மின்சார வேலியில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.

மேலதிக விசாரணைகளின் போது அவர் மற்றொரு நபருடன் சேர்ந்து, உடலை வெறிச்சோடிய கிணற்றில் வீசி மூடியதாகவும் தெரியவந்துள்ளது. அதன்படிஇ காணியின் உரிமையாளரும் அவருக்கு உதவிய நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 38 மற்றும் 46 வயதுடைய தெமடகஹகந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். எல்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.