மட்டக்களப்பு காத்தான்குடியில் கொட்டும் மழையிலும் இன்றும் வீதிகள் தோறும் நடமாடும் வாகனத்தின் மூலம் அன்ரிஜன் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றன.
காத்தான்குடி நகர சபை பிரிவில் நான்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளிலும் இந்த நடமாடும் அன்ரிஜன் பரிசோதனைகள் இடம் பெற்று வருகின்றன.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் தலைமையில் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஆசாத் ஹசனின் மேற்பார்வையில் இந்த அண்டிஜன் பரிசோதனைகள் இடம் பெற்று வருகின்றன.
பொலிசாரின் பாதுகாப்புடன் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.புலேந்திரகுமார் உட்பட பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அதிகாரிகள் அண்டிஜன் பரிசோதனையை மேற் கொண்டு வருகின்றனர்.
பொது மக்கள் இதற்கான பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதாகவும் ஆர்வத்துடன் அண்டிஜன் பரிசோதனைக்கு சமூகம் கொடுப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை முதல் இரவு 10 மணி வரை 237 பேருக்கு மேற் கொள்ளப்பட்ட வீதியிலான நடமாடு;ம் அண்டிஜன் பரிசோதனையின் போது ஆறு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாகவும் சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டனர்.