மாகாண சபை முறைமையை உச்சளவில் பயன்படுத்திக்கொண்டு, அதிலிருந்து பயணிப்பது தொடர்பில் பேசுகின்ற போது, ஒரு கேள்வி குறுக்கிடுவதை காணமுடிகின்றது.
இவர்கள் பேசும் விடயம் அன்றைய சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் நிராகரிக்கப்பட்டது.
அதனை எவ்வாறு இவர்கள் கோரலாம்? சிலர் இப்படி கேட்க முயற்சிக்கின்றனர்.
இந்தக் கேள்வி சரியானதா? விடுதலைப் புலிகள் மாகாண சபையை ஏற்றுக்கொள்ளவில்லையென்று கூறுபவர்கள் – அவர்கள்
எவ்வாறானதொரு தீர்வை ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறுவதில்லை.
இந்தியா சமஷ்டியை வலியுறுத்த வேண்டுமென்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கூறுகின்றது.
அதன் பின்னால் தமிழரசு கட்சியும் செல்ல முயற்சிக்கின்றது.
இந்த இடத்தில் எழும் கேள்வி – விடுதலைப் புலிகளின் தலைமை எப்போது சமஷ்டியை பகிரங்கமாக கோரியது? அவ்வாறானதொரு கோரிக்கையை விடுதலைப் புலிகளின் தலைமை ஒருபோதுமே பொதுவெளிகளில் முன்வைத்ததில்லை.
அவர்களின் இலக்கு தனிநாடு ஒன்றுதான்.
எனவே, விடுதலைப் புலிகள் நிராகரித்ததை இன்று ஏற்றுக்கொள்ளக்கூடாதென்று கூறினால், சமஷ்டியையும் கோர முடியாது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமை இறுதிவரையில் தனிநாடு ஒன்றுக்காகவே தியாகங்களை புரிந்தது.
அந்த போரில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, எவருமே தனிநாடு தொடர்பில் பேசவில்லை.
பேசவும் முடியாது ஏனெனில், தனிநாட்டுக்கான அர்ப்பணிப்பு, உழைப்பென்பது வேறு.
இந்த பின்புலத்தில் நோக்கினால், 2009 மே மாதத்திற்கு பின்னர் பேசப்பட்ட, சமஷ்டி, ஒரு நாடு இரு தேசங்கள் என்னும் கோசம், அனைத்துமே விடுதலைப் புலிகளின் தலைமையால் பொது வெளிகளில் என்றுமே பேசப்படாத விடயங்கள்தான்.
பாலசிங்கம் சில சொற்களை பயன்படுத்தியிருக்கலாம் ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமை பொது வெளிகளில் தனிநாட்டுக்கு மாறான சமஷ்டி முறைமையிலான அரசியல் தீர்வொன்றை பெறுவதற்கு தாங்கள் தயராக இருப்பதாக என்றுமே கூறியதில்லை.
இந்த நிலையில் மாகாண சபை தொடர்பில் பேசியவுடன், விடுதலைப் புலிகள் நிராகரித்த ஒன்றை இப்போது கோருவதாக வாதிட முயற்சிப்பதில் பயனில்லை. அனைவருக்கும் தெரியும்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை பொறுத்தவரையில் எவர் – என்ன
பேசினாலும், அதன் தலைமை ஒன்றை, உச்சரிக்காத வரையில், அதற்கு
எந்தவொரு பெறுமதியும் இல்லை.
விடுதலைப் புலிகள் இயக்கம் இறுதிவரையில், அவர்கள் வரித்துக் கொண்ட தனிநாட்டுக்கான பயணத்தையே மேற்கொண்டிருந்தது.
இது தான் வரலாறு.
ஆனால் 2009இற்கு பின்னரான அரசியல் சூழல் முற்றிலும் வேறானது.
தமிழ்க் கட்சிகள் முன்னர் கைவிட்டதாக கூறியவற்றை நோக்கியே திரும்பவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
கடந்த 14 வருடங்களின் தமிழ் தேசிய கட்சிகளின் இயலாமை தெளிவாகவே நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறானதொரு சூழலில்தான், அரசியலமைப்பில் இருப்பவற்றை முதலில் அமுல்படுத்துமாறு கோரும் கோரிக்கைகள் அண்மைக்காலமாக வலுவடைந்திருக்கின்றன.
இது விருப்பம் அல்ல – மாறாக, காலத்தின் நிர்ப்பந்தம்.
காலத்தின் நிர்பந்தங்களை புறம்தள்ளி செயலாற்ற முடியாது.
காலத்தின் நிர்ப்பந்தங்களை புறம்தள்ளி செயற்பட முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில், மோசமான தோல்வியையே நாம் சந்தித்திருக்கின்றோம்.
இந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள மாட்டோமென்று அடம்பிடிப்பது, உண்மையில் மக்கள் மீதான அக்கறையின்மையன்றி, வேறில்லை.