காலிமுகத் திடலில் கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேக நபர்கள் அனைவரினதும் வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு கோட்டை நீதிவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை பிறப்பித்த நீதிவான், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவிக்குமாறு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கான கோப்பு சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
போராட்டக்காரர்கள்மீதான தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மிலன் ஜயதிலக்க, சனத் நிஷாந்த மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 36 சந்தேக நபர்களில் 30 பேர் திறந்த நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.