இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்கவின் மாமனாரான வர்த்தகர் லலித் வசந்த மென்டிஸ், காலியில் அவரது காரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டமை பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கிடையிலான மோதலின் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ரத்கம விதுர என்ற பாதாள உலகக் குழுத் தலைவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ரத்கம விதுர மற்றும் கொஸ்கொட சுஜீக்கு இடையில் கடும் பகை உள்ள நிலையில் இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ரத்கம விதுர என்ற நபர் தற்போது இத்தாலியில் தலைமறைவாகி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதுடன், கொஸ்கொட சுஜீ டுபாயில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் தென்னிலங்கையில் இடம்பெற்ற பல பாதாள உலக சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என தகவல் கிடைத்துள்ளது.
எவ்வாறாயினும், கொலை செய்யப்பட்ட வர்த்தகர், போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் இதற்கு முன்னர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.காலி நகரின் மிகப் பெரிய ஆடை விற்பனை நிலையத்தின் உரிமையாளரான லலித் வசந்த மெண்டிஸ், தனது வியாபார ஸ்தலத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், டிக்சன் வீதியில் வைத்து இனந்தெரியாத இரு துப்பாக்கி தாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.