கிரானைட் ஏற்றுமதியை பரிசீலிக்க குழு நியமிக்க தீர்மானம்

0
98
ஒரு மில்லியன் மெட்ரிக் தொன் வரையிலான கிரானைட் ஏற்றுமதிக்கான சாத்தியம் மற்றும் சரியான தன்மை குறித்த உண்மைகளை ஆய்வு செய்து பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்கான குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.தற்போது நாட்டில் நிர்மாண மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கிரானைட் தேவை குறைந்துள்ளதாகவும், கிரானைட் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சமூகங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக நிர்மாணப் பணியின் போது அகற்றப்பட்ட கிரானைட் கற்கள் தற்போது துறைமுகப் பகுதியின் நிர்வாக கட்டிடத்திற்கு அருகாமையிலும் ஹம்பாந்தோட்டை புதிய வைத்தியசாலை வளாகத்திலும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி கிரானைட் கற்கள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.சுற்றாடல் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் மேற்பார்வையின் கீழ் மேற்படி கிரானைட் கையிருப்புகளை உடனடியாக ஏற்றுமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.