பல்கலைக்கழக ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கக்கோரி, கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று வந்தாறுமூலையில்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம், இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 8 தேசிய தொழிற்சங்கங்களில்
அங்கம் வகிக்கும் கூட்டமைப்பு ஆகிய ஒன்றிணைந்து இந்த வாரம் தொடக்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவது என எடுத்த தீர்மானத்துள்ளன.
இதற்கு அமைவாக, வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகம் முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
நேற்று செவ்வாய்கிழமை நண்பகல் 12 மணியுடன் தமது கடமைகளில் இருந்து விலகி பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஊழியர்கள்,
இன்று முழு நாளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகள், செய்முறை பயிற்சிகள், கள விஜயங்கள் மற்றும் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் முக்கிய கூட்டங்களும் பிற்போடப்பட்டுள்ளன.
கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் ஏகாம்பரம் ஜெகராஜு தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டம், மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு தரங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.