குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ‘வெல்லே சாரங்க’ வின் உறவினரான ‘உக்குவா’ என அழைக்கப்படும் நபரை சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம், கடந்த 21 ஆம் திகதி மஹாபாகே பிரதேசத்தில் இடம்பெற்றது.
கைது செய்யப்பட்ட நபர், மட்டக்களப்பு – செங்கலடி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபரை கைது செய்யச் சென்ற போது, சந்தேக நபர், மட்டக்களப்பு செங்கலடி இராணுவ முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அதனைத்தொடர்ந்து, சந்தேக நபர், அம்பாறை பிரதேசத்தில் வைத்து, இராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘உக்குவா’வின் கொலைச் சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட, மேலும் இரண்டு முன்னாள் இராணுவ வீரர்கள், சம்பவ இடத்தில் இருந்ததாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.