சென்னை: மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணியாற்றிய கார்த்தி, 2004 மே 21ம் தேதி ரிலீசான ‘ஆய்த எழுத்து’ படத்தில், சூர்யாவின் நண்பராக நடித்தார். அவர் ஹீரோவாக அறிமுகமான படம், ‘பருத்திவீரன்’. இதை அமீர் இயக்கினார். 2007 பிப்ரவரி 23ம் தேதி ரிலீசான இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள கார்த்தி, தற்போது ராஜூ முருகன் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜப்பான்’ படத்தை தனது 25வது படமாக அறிவித்துள்ளார். வரும் தீபாவளியன்று திரைக்கு வரும் இதில் அனு இம்மானுவேல், ஜித்தன் ரமேஷ், கே.எஸ்.ரவிகுமார், சுனில், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் எஸ்.டி.விஜய் மில்டன் நடித்துள்ளனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 28ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இதுகுறித்து ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு நிருபர்களிடம் கூறுகையில், ‘கார்த்தி நடித்த ‘சகுனி’, ‘காஷ்மோரா’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘கைதி’, ‘சுல்தான்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘ஜப்பான்’ படத்தை தயாரித்துள்ளேன். இதற்காக நடக்கும் விழாவில் ‘கார்த்தி 25’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 25 படங்களில் அவரை இயக்கியவர்கள், தயாரித்தவர்கள், இணைந்து பணியாற்றியவர்களை அழைத்து கவுரவிக்கிறோம். ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்த பிறகு ‘கைதி 2’ படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. எனது தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் மிகப் பிரமாண்டமான படமாக இது உருவாகும்’ என்றார்.