-அலசுவது இராஜதந்திரி-
இலங்கையில் யுத்தம் முடிவடைந்ததுமே பிராந்திய வல்லரசுகளான சீனா, இந்தியா, ஜப்பான் ஆகியவை எவ்வளவு தூரம் இலங்கைமீது தமது பொருளாதார மற்றும் பிராந்திய அரசியல் நலன்களுக்காக கண்வைத்திருந்தன என்பதனை தற்போது புதிதாக வெடித்துள்ள கொழும்பு துறைமுக கிழக்கு-மேற்கு முனையங்களின் சர்ச்சை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்ததுமே சீனா தனது கையை மேலோங்க வைப்பதில் முன்னின்று, கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் மத்தள விமான நிலைய நிர்மாணம் என்பவற்றை முன்னெடுத்திருந்தது.
இலங்கையின் குறிப்பாக, தலைநகர் கொழும்பின் தரைத்தோற்றத்தையே மாற்றியமைக்கும் விதத்தில், துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் சீனாவினால் மிக விரிவான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சீனாவின் பாரிய திட்டம்
இலங்கையைப்பொறுத்தவரை சீனாவின் துறைமுக நகர அபிவிருத்தி திட்டம், பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பாரிய திட்டமாக அமைந்திருக்கலாம்.
ஆனால், சீனாவைப் பொறுத்தவரை அதன் ஆதிக்கத்தை பிராந்திய ரீதியாக எவ்வளவு தூரம் விஸ்தரிக்கலாம் என்ற செய்தியை இந்தியாவுக்கும், மேற்குலகுக்கும் வழங்குவதாகவே கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் காணப்பட்டுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.
தற்போது கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு-மேற்கு முனையங்களை பங்குபோடுவதில் புதிய சர்ச்சை பூதாகாரமாக கிளம்பியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
சீனா தற்போது இலங்கை அரசின் உற்ற நண்பனாக இருக்கலாம். ஆனால் இந்தியா, இலங்கையில் நிலவிய மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பெரும் பங்காற்றியிருந்தது.சீனா யுத்த தளபாடங்களை ஏராளமாக வழங்கி, இலங்கைக்கு யுத்த காலத்தில் உதவியிருக்கலாம்.
ஆனால், இந்தியாவின் இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியான நகர்வுகளே, இலங்கை பிளவுபடாத ஒரு நாடாக யுத்தத்தை முடித்துக்கொண்டமைக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
பொருளாதார வல்லரசு
சீனா, ஆசிய பிராந்தியத்தில் ஒரு முக்கிய பொருளாதார வல்லரசாக கடந்த மூன்று தசாப்த காலத்தில் மாற்றங்கண்டுள்ளது. ஆயினும் சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகளைப் பொறுத்ததவரை இந்தியா நீண்ட நெடுங்காலமாகவே தனக்கென ஒரு தனியான இடத்தை வகித்துவருவதை காணமுடிகின்றது.
மேற்குலக நாடுகளின் தோழமை நாடாகவும், தூர கிழக்கில்கூட வளர்ச்சியுற்ற ஜப்பான், தென் கொரியாபோன்ற நாடுகளின் தோழமை நாடாகவும் பலதரப்பட்ட பொருளாதார ரீதியிலான ஒத்துழைப்பை இந்த இருநாடுகளுடன் இந்தியா கொண்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
இவ்வகையில், உள்நாட்டு யுத்தம் இலங்கையில் முடிவுக்கு வந்துள்ளபோதிலும், தற்சமயம் பிராந்திய ரீதியல் இலங்கை இராஜதந்திர ரீதியாக சீனாவையும், இந்தியாவையும் கையாள வேண்டியுள்ள நிர்ப்பந்தத்துக்குள்ளாகியிருக்கின்றது. சீனா பொருளாதார ரீதியாக பலம்பெற ஆரம்பித்ததுமே, குறிவைக்க ஆரம்பித்த நாடுகளாக உள்நாட்டு அரசியல் பூசல்களால் நலிவுற்ற ஆபிரிக்க நாடுகளும் விளங்கின.
சீனாவின் இத்தகைய பொருளாதார ரீதியான ஆதிக்க விஸ்தரிப்பு குறித்து பல மேற்குலக பொருளாதார நிபுணர்கள்கூட சாதகமான முறையிலேயே தமது கண்ணோட்டங்களை வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
நடுநிலையான மேற்குலக பொருளாதார நிபுணர்கள் சீனா குறித்து கருத்து வெளியிட்டபோது, சீனா அரசியல் ரீதியிலான சர்ச்சைகளை ஏற்படுத்தி, ஆயுத தளபாடங்களை விற்று, தனது ஆதிக்க விஸ்தரிப்பை மேற்கொள்ளவில்லை.
மாறாக, கடன் வசதிகளை நீண்ட கால அடிப்படையில் வழங்கி, பாரிய அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு, தனது நலன்களையும் பாதுகாத்து, தன்னால் உதவி வழங்கப்படுகின்ற நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கும் துணை போகின்றதென்பதே நடுநிலையான பொருளாதார நிபுணர்களின் அபிப்பிராயமாகவும் இருக்கின்றது.
எனவே, கொழும்பு துறைமுக கிழக்கு – மேற்கு முனையங்கள் குறித்து புதிதாக தோற்றம் பெற்றுள்ள சர்ச்சை, இலங்கைக்கு இராஜதந்திர ரீதியல் சீனா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை கையாளுவது தொடர்பாக புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளதையே அவதானிக்க முடிகின்றது.