கொஸ்கமவில் ரணில் பிரசாரம்!

0
69

அன்று மக்கள் படும் துன்பங்களைக் கண்டுகொள்ளாத சஜித்தும் அநுரவும் இன்று பேராசையின் காரணமாகவே மக்கள் முன்வந்து நிற்பதாகவும், இடர்பாடுகளுக்கிடையில் கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க இடமளிக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொஸ்கமவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

‘நாட்டின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தவும் நாட்டு மக்களுக்கு வாழும் உரிமையை வழங்கவும் தான் இந்த நாட்டின் ஜனாதிபதியின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அன்று மக்கள் உணவு, மருந்து, எரிபொருள் இல்லாமல் உணவு சமைக்க எரிவாயு இல்லாமல் கஷ்டப்பட்டனர். மேலும், தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலைவாய்ப்பு வருமான வழிகளும் இல்லாமல் போனது. இந்த நிலை எனக்கு வேதனையாக இருந்தது. எனவே நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.

சஜித் பிரேமதாசவோ அல்லது அனுரகுமார திஸாநாயக்கவோ உங்கள் பசியை போக்க தயாராக இருக்கவில்லை. மக்களுக்கு எரிபொருளையும் எரிவாயுவையும் வழங்கி வாழும் உரிமையை வழங்க அவர்கள் தயாராக இல்லை. இந்நாட்டு மக்கள் துன்பப்பட்டபோது, ​​அதை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மக்களுக்கு நிவாரணம் கொடுக்க விரலைக் கூட அசைக்கவில்லை.
ஆனால் மக்களுக்கு உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு வழங்கி, பாடசாலைகளை திறந்து மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறந்து நாட்டின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தேன். அதன்படி நானும் என்னுடன் இருந்த பிரதமரும், அமைச்சர்களும், எம்பிகளும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்தோம்.

சஜித்தும் அநுரவும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் மக்கள் தொடர்பில் எமக்கு வேதனை இருந்தது. அந்த வலியின் காரணமாகவே மக்களுக்கு நிவாரணம் வழங்க பாடுபட்டோம். சஜித்தும், அநுரவும் இந்நாட்டு மக்கள் படும் துன்பத்தைப் பார்க்கவில்லையா மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாதிருப்பதை காணவில்லையா? அதற்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப எம்முடன் இணையுமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் வரவில்லை. ராஜபக்சவைப் பாதுகாக்கவே நான் வந்ததாக கூறினார்கள். நான் ராஜபக்சக்களைப் பாதுகாத்திருந்தால் அவர்களும் இன்று இந்த மேடையில் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வேறு மேடையில் இருக்கிறார்கள்.

அன்று மக்கள் படும் துன்பத்தைக் கண்டும் உதவிக்கு வராதவர்கள் இன்று மக்கள் முன் வருவதற்கு ஜனாதிபதி பதவி மீதான பேராசைதான் காரணம்.
நாட்டின் பொருளாதாரம் இன்னும் முழுமையாக வலுப்பெறவில்லை. நாட்டின் பொருளாதாரத்தைக் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்தோம். எனவே கஷ்டப்பட்டு கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்தை யாரும் அழிக்க அனுமதிக்க வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். செப்டம்பர் 22ஆம் திகதி, அனைவரும் ஒன்றிணைந்து இந்த திட்டத்தை வலுவாக முன்னெடுப்போம்’ என்று தெரிவித்தார்.