முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ள நிலையில் அவரை நாடாளுமன்றத்துக்கு அழைத்து வந்து பிரதமராக்கும் அரசியல் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு இடம்பெற்றதைப் போன்றே தற்போதும் அரசியல் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவைப் பதவி நீக்கிவிட்டு கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு முயற்சிக்கப்பட்டு வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியுள்ளார்.
எனினும், அவர் மீதும், மஹிந்த, பஸில் மீதும் நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இப்படியிருக்கையில் ராஜபக்ச குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக அரசியல் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன என துஷார இந்துனில் தெரிவித்துள்ளார்.