கோட்டாபய ராஜபக்ஸ, சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து செல்லவுள்ளார்!

0
181

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,நாளைய தினம் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து செல்லவுள்ளதாக
சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடியையடுத்து, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் அலுவலகத்தை ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கையகப்படுத்தியதால் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 14ஆம் திகதி மாலைத்தீவு வழியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சிங்கப்பூருக்கு சென்றார்.
முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரை விட்டு வெளியேறி தாய்லாந்தின் தலைநகர் பாங்;கொக்கிற்கு வியாழக்கிழமை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு தகவல் வட்டாரங்கள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கோரிக்கைகளுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சு உடனடியாக பதிலளிக்கவில்லை என்றும், தாய்லாந்து அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து ரொய்ட்டர்ஸிடம் கருத்துவெளியிட மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை விட்டு வெளியேறியதில் இருந்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுத் வெளியில் தோன்றவோ கருத்துக்களை தெரிவிக்கவோ இல்லை.
தாம் அவருக்கு எந்த சலுகைகளையும் விலக்குகளையும் வழங்கவில்லை என்று சிங்கப்பூர் அரசாங்கம் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் அவருக்கு நாளை வரை குறுங்கால பயண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த அனுமதி காலம் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் அவர் தாய்லாந்து செல்லவுள்ளதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி, எதிர்காலத்தில் இலங்கைக்கு திரும்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சில நாட்களுக்கு
முன்னர் கருத்து வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.