சங்கீத ஆசிரியை கொலை -நீதிவான் பொலிஸாரிடம் கேள்வி !

0
91

கொழும்பு கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 15 ஆம் திகதி இடம்பெற்ற சங்கீத ஆசிரியையின் கொலை சம்பவம் தொடர்பிலான  விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வு பிரிவினரின்  செயற்பாடுகளை அவதானித்து கொழும்பு பிரதான நீதிவான் பிரசன்ன அல்விஸ் உப பொலிஸ் பரிசோதகரிடம் இது பொலிஸ்துறையா என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான உரிய தகவல்கள் முன்வைக்கப்படாத நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியை எதிர்வரும் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் தகவல்களை உப பொலிஸ் பரிசோதகர் முன்வைத்ததன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர் அருகில் உள்ள இரு வீடுகளில் சிசிரிவி கமரா இருப்பதாகவும் அந்த வீட்டு உரிமையாளர்கள் சிசிரிவி காட்சிகளை தர தயங்குவதாகவும் உப பொலிஸ் பரிசோதகர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அந்த சிசிரிவி காட்சிகளானது 14 நாட்களில் அழிந்திவிடுவதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான உண்மைகளை பொலிஸார் மறைக்க முயற்சிப்பதாக உயிரிழந்தவர் சார்பாக வழக்கில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கொடுக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் விசாரித்த நீதிவான் பிரசன்ன அல்விஸ், சிசிரிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியவில்லையா இது பொலிஸ்துறையா என கேள்வி எழுப்பியுள்ளதோடு வழக்கு தொடர்பில் புரிதல் இன்றி நீதிமன்றத்தில் தகவல்கள் முன்வைக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.