சஜித் பிரேமதாஸவின் ஜனாதிபதி கனவு?

0
144

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் உடைவுகள் ஏற்படலாமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனை சமாளிக்க முடியாமல் சஜித் பிரேமதாஸ நெருக்கடிகளை சந்தித்திருக்கிறார் என்றும் ஒரு பார்வையுண்டு.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் அரசியல் அரங்கில் பிரவேசித்தமையைத் தொடர்ந்து, நிலைமைகள் வேகமாக மாற்றமடைந்து வருகின்றதா என்னும் கேள்வி எழுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இருப்பதில் பயனில்லையென்றுதான் சஜித் பிரேமதாஸ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வெளியேறினார்.
சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்கள் அவருடன் வெளியேறினர்.
பொதுவாக, தென்னிலங்கை அரசியலில் உடைவுகள் ஏற்படுவது கொள்கை சார்ந்த ஒன்றல்ல – ஆனால், அனைவருமே கொள்கை பற்றித்தான் பேசுவர்.
இது தமிழ் அரசியல் சூழலுக்கும் இப்போது அதிகம் பொருந்திப்போகின்றது.
பொதுவாக அரசியல்வாதிகள் கொள்கை தொடர்பில் பேசிக் கொண்டாலும்கூட தேர்தல் வெற்றிக்கான கணக்குகளின் அடிப்படையிலேயே உடைவுகள் ஏற்படுகின்றன.
சஜித் பிரேமதாஸவுடன் சென்றால் தங்களின் வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்தலாமென்றுதான் பலரும் அவருடன் சென்றனர்.
மற்றும்படி ரணில் விக்கிரமசிங்கவுடன் கொள்கை ரீதியில் முரண்பட்டுச் செல்லவில்லை.
ரணில் விக்கிரமசிங்க சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாதவர்.
அவருடன் இருந்தால் தங்களால் வெற்றிபெற முடியாதென்றே பெரும்பாலான ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பினர்.
ஆனால், நாடு மோசமானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிய போது சஜித் பிரேமதாஸ விரைந்து செயலில் இறங்கவில்லை.
நாட்டை மீட்பதற்கான தலைமைத்துவத்தை வழங்க முன்வரவில்லை.
இந்த இடத்திலிருந்து சஜித் பிரேமதாஸவின் தலைமைத்துவம் தொடர்பான கேள்விகள் எழத் தொடங்கின.
இப்போது அது மெதுவாக உடைவை நோக்கிச் செல்கின்றது.
நாட்டை ஆபத்திலிருந்து மீட்கக் கூடிய ஒருவரென்னும் பார்வையை ஏற்படுத்துவதில் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடத்தக்களவு வெற்றியைப் பெற்றிருக்கின்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் முன்னைய வீழ்ச்சி நிலையில் தான் இருக்கின்றது.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க ஓர் ஆளுமை என்னும் வகையில் உயர்ந்திருக்கின்றார்.
அவர் முன்னரும் ஆளுமைமிக்க அரசியல்வாதியாகவே இருந்தார்.
ஆனால், வாக்குகளுக்காக வளைந்து கொடுக்காத அவரின் அரசியல் அணுகுமுறைகள் அவருக்கு தொடர்ந்தும் பின்னடைவையே ஏற்படுத்தின.
தென்னிலங்கையில் எவராலும் நெருங்க முடியாதவோர் அனுபவமும் ஆற்றலும் சர்வதேச அங்கீகாரமும் கொண்ட ஒருவராக இருந்தபோதிலும்கூட, சாதாரண சிங்கள மக்கள் மத்தியில் ரணில் ஒரு தலைவராக நோக்கப்படவில்லை.
தங்களுக்கான தலைவரென்று ரணிலைப் பார்ப்பதற்கு பெரும்பான்மையான சிங்களவர்கள் தயங்கினர்.
ரணிலின் தோற்றம், பேச்சாற்றலின்மை, மேற்குலக அரசியல்வாதிகள் போன்ற தோற்றம் – இவைகள் சிங்கள மக்கள் மத்தியிலிருந்து ரணிலை தொடர்ந்தும் அந்நியப்படுத்தவே பயன்பட்டன.
ஆனால், இப்போதும் ரணில் பதவிக்காக தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.
நாட்டை என்னால் கட்டியெழுப்ப முடியும் – என்னால் மட்டும்தான் முடியும்.
வாய்ப்பை தந்தால் நான் அதனை செய்வேன் என்றவாறான முரட்டு சுபாவத்துடனேயே செயல்படுகின்றார்.
பதவிக்காக தன்னை மாற்றிக் கொள்ளாத ஓர் அரசியல்வாதியாகவும் ரணில் தென்படுகின்றார்.
எனவே, இவ்வாறான சூழலில் ஜனாதிபதி தேர்தலில் ரணிலை எதிர்கொள்ளக் கூடியதொரு வேட்பாளராக சஜித் பிரேமதாஸவால் நிற்க முடியுமா என்னும்
கேள்வி எழுந்திருக்கின்றது.
ரணில் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் அதன் பின்னர் நிலைமைகளை சமாளித்துவிடுவார்.
பாராளுமன்றத்தையும் கைப்பற்றுவதற்கான வியூகங்களை வகுப்பார்.
அவருக்கு மேற்குலகத்தின் முழுமையான ஆதரவுண்டு.
இந்த நிலையில் தேர்தல் வெற்றியென்று நோக்கினாலும் ரணிலுடன் நிற்பது தங்களுக்கு வாய்ப்பானதா – என்று எதிரணியிலுள்ளவர்கள் சிந்திக்கலாம்.
அவர்கள் அவ்வாறு சிந்தித்தால் நிச்சயம் ஐக்கிய மக்கள் சக்தியில் உடைவுகள் தவிர்க்க முடியாதவை.