பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 டி-20 போட்டிகள் கொண்ட நெடுந்தொடரில் பங்கேற்கிறது. கராச்சியில் நேற்று நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 46 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து பாபர் அசாமின் சாதனையை ரிஸ்வான் சமன் செய்துள்ளார். கோலி தனது 56வது சர்வதேச டி-20 இன்னிங்ஸில் 2000 ஓட்டங்களைக் கடந்தார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஏற்கனவே 52வது இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில் ரிஸ்வானும் தனது 52வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்த வீரர்களில் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகிய இருவரும் முதலிடத்தில் உள்ளனர்.