சாய்ந்தமருது பிரதேசத்தில் அண்மைக்காலமாக வீசிக் கொண்டிருக்கும் துர்நாற்றம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று சாய்ந்தமருது பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதாரப் பிரதிப் பணிப்பாளர், கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்கள், சாய்ந்தமருது பிரதேச பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, கல்முனை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி, சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள், சுற்றாடல் உத்தியோகத்தர்கள், பொது மக்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்கள்.
இக்கலந்துரையாடலில் சாய்ந்தமருது மேற்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மாடு அறுக்கும் மடுவத்தை, அதனைச்
சூழவுள்ள பிரதேசங்கள் உட்பட சாய்ந்தமருது பிரதேசத்தில் பொதுச் சுகாதாரத்திற்கு கேடு தரக்கூடிய இடங்களை ஆய்வுக்கு உட்படுத்தி அதற்கான முறையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
பொறுப்பு வாய்ந்தவர்கள் இதற்குரிய தீர்வை நோக்கி முன்னேற வேண்டியுள்ளதுடன் சட்ட விரோதமாக இருக்கின்ற கழிவு அகற்றல் தடுப்பது குறித்த பிரதான பணியை மாநகர சபை செய்ய வேண்டும் என இதன்போது கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.