கையடக்க தொலைபேசியிலும் உடல் நலம் குறித்த எச்சரிக்கை வாசகத்தை இடம்பெற செய்ய ஸ்பெயின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அரசுக் குழுவின் பரிந்துரைப்படி விரைவில் இந்த வாசகம் தொலைபேசிகளில் இடம்பெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதிநவீன கையடக்க தொலைபேசி பாவனை மனநலன், உடல்நலம், தூக்கம், உறவு முறை என அனைத்தையும் வயது வித்தியாசமின்றி பாழ்படுத்துகிறது.
இதைக் கருத்தில் கொண்ட ஐரோப்பிய தேசமான ஸ்பெயின் இந்த துணிச்சலான முடிவை எடுத்துள்ளது. அதாவது சிகரெட் போலவே தொலைபேசியிலும் எச்சரிக்கை வாசகத்தை இடம்பெற செய்ய முடிவு செய்துள்ளது.
ஸ்பெயின் அரசு நியமித்த வல்லுநர் குழு தாக்கல் செய்துள்ள 250 பக்க ஆய்வறிக்கையில் இது முன்மொழியப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் டிஜிற்றல் சாதனங்களை சிறுவர்கள் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவது சார்ந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகளவில் சிகரெட் பிடிப்பதால் கோடிக் கணக்கிலான மக்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
அதனைத் தடுக்கும் பொருட்டு பல்வேறு நாடுகளின் அரசுகள் சிகரெட் உட்பட புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுகளை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில் அந்தப் பொருட்களில் படங்கள் மற்றும் வாசகங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருகின்றன.
அதே வழியில் நவீன தொலைபேசி பாவனையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க ஸ்பெயின் அரசு இந்தத் திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.
அண்மையில் அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் சட்டத்துக்கு அந்த நாட்டு பாராளுமன்றம் அனுமதி வழங்கியது.