தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம், சிங்கப்பூரின் ஒன்பதாவது, ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கின்றார்.
சிங்கப்பூர் பல்வேறு இனக்குழுக்களைக் கொண்டிருக்கும் நாடு.
பிரதான இனக்குழுவாக சீனர்களே இருக்கின்றனர்.
சிங்கப்பூரின் சிற்பியென்று வர்ணிக்கப்படும், காலம் சென்ற லீ குவான் யூவின் தூரநோக்கும், ஆளுமையான தலைமைத்துவத்தின் விளைவாகவே, ஒரு தமிழர் அந்த நாட்டில் ஜனாதிபதியாக வரமுடிந்திருக்கின்றது.
இதிலுள்ள ஆச்சரியமான விடயம் – ஒரு காலத்தில், இலங்கை போன்று சிங்கப்பூரை, கட்டியெழுப்ப வேண்டுமென்னும் கனவை, லீ குவான் யூ, வெளிப்படுத்தியிருந்தார்.
அந்தளவுக்கு இலங்கை அன்றைய சூழலில் ஆசியாவில் முன்னுதாரணம் மிக்க நாடாக இருந்தது.
ஆனால் பிற்காலத்தில், நல்லவேளை – இலங்கை போன்றதொரு ஆபத்துக்குள் சிக்கிவிடவில்லையென்று – லீ குவான் யூ, எண்ணிக்கொள்ளுமளவிற்கே, இலங்கையின் நிலைமைகள் தரம் தாழ்ந்து போனது.
சிங்கப்பூரின் இன்றைய வளர்ச்சிக்கும் எழுச்சிக்குமான அடிப்படையான காரணம் என்ன? நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட, லீ குவான் யூ, ஒரு விடயத்தில் உறுதியாக இருந்தார்.
அதாவது, இனவாத, மதவாத சிக்கலுக்குள் ஒருபோதும் சிங்கப்பூர் விழுந்து விடக்கூடாது.
அவ்வாறு விழுந்தால், சிங்கப்பூர் ஒருபோதுமே முன்னேற முடியாது.
இதற்கான தலைமைத்துவத்தை வழங்குவது பற்றி மட்டுமே அவர் சிந்தித்தார் – அந்த அடிப்படையில் மட்டுமே முன்னேறினார்.
இன்று சிங்கப்பூர் அனைத்து இன மக்களையும் ஒரு மக்களாகக்கொண்டு, முன்னேறிய நாடாக திகழ்கின்றது.
அரசியல்வாதிகளை, அவர்களது – திறமையின் அடிப்படையில் மட்டுமே, மக்கள் தீர்மானிக்கின்றனர்.
அவர் சீனரா, தமிழரா என்றெல்லாம் அங்கு பாகுபாடுகள் இல்லை.
இதன் காரணமாகவே சிங்கப்பூரால் பொருளாதார நிலையில் உயர்ந்து நிற்க முடிகின்றது.
ஒரு காலத்தில் சிங்கப்பூருக்கு முன்னுதாரணம் மிக்க நாடாக திகழ்ந்த, இலங்கைத் தீவோ, இனவாத, மதவாத சிக்கலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாகியதன் விளைவை அனுபவித்துக்கொண்டிருக்கின்றது.
இனங்களுக்கிடையிலான பிரச்னைகளை ஆக்கபூர்வமாக தீர்த்துக்கொள்ளும் பொறிமுறையற்ற அரசியலால், உள்நாட்டு யுத்தமொன்றிற்கு
முகம் கொடுத்து, அந்த யுத்தத்தில் வெற்றிபெறுவதற்காக உலகெங்கும் கடன்களை வாங்கி, மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி, அதிலிருந்து மீள்வதற்காக நாடுகளின் காலடியில் வீழ்ந்து கிடக்கின்றது.
ஆனால் இந்த நிலையில் கூட, கற்கால சிந்தனையுள்ள இனவாத மற்றும் மதவாத சக்திகளின் பிடியிலிருந்து வெளியில் வர முடியாமல் இருக்கின்றது.
கற்கால சிந்தனையை பாதுகாப்பது பற்றித்தான் இப்போதும் சிங்கள அரசியல்வாதிகள் சிந்திக்கின்றனர்.
சிங்கள ஆட்சியாளர்களை பொறுத்தவரை நாட்டை முன்னேற்ற பாதையில் வளர்ப்பதை விடவும், தமிழ் மக்களை இரண்டாம் நிலையில் வைத்துக் கொள்வதை மட்டுமே தங்களின் ஒரேயொரு அரசியல் வேலைத்திட்டமாகக் கொண்டிருந்தனர்.
அது இன்றுவரையில் தொடர்கின்றது.
இப்போதும் இந்த நாடு யாருக்கு சொந்தமானதென்னும், கற்கால விவாதத்திற்குள்தான், சிங்கள ஆட்சியாளர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் சிங்கப்பூரில் இன்று நிகழ்ந்திருப்பது இலங்கையில் எப்போதோ நடந்திருக்கவேண்டும்.
ஒரு பல்லின நாடாக இலங்கையை பாதுகாத்திருந்தால், அனைத்தின மக்களினதும் சரிசம பங்களிப்புடன், இலங்கைத் தீவு உலகில் தலைசிறந்த நாடாக திகழ்ந்திருக்கும்.
ஆனால் இன்றோ, நிலைமை தலைகீழாகிவிட்டது.
சிங்கப்பூரின் வளர்ச்சியை, அதன் முன்னேற்றத்தை, அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையை பெருமூச்சுடன் நோக்கும் நிலையிலேயே இலங்கையர்கள் இருக்கின்றனர்.
பல்லினங்களை கையாளும் அறிவுப் பெட்டகமாக சிங்கப்பூர் திகழ்கின்றது.
அறிவை தொலைத்து, வெறும் இனவாதத்திற்குள் சிக்குப்பட்டுக்கிடக்கும் நாட்டுக்கு உதாரணமாக, இலங்கை திகழ்கின்றது.