சீனர்களுக்கு சுற்றுலா விசாவை வழங்கும் இந்தியா!

0
11

சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசா சேவையை, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா மீண்டும் இன்று தொடங்குகிறது.

இது தொடர்பாக சீனாவில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில்,

சீன குடிமக்கள் இந்தியாவுக்கு வருகை தர சுற்றுலா விசாவுக்கு ஜூலை 24 முதல் விண்ணப்பிக்கலாம். முதலில் ஒன்லைன் முறையில் விசா கோரி விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு, இந்திய விசா விண்ணப்ப மையத்தில் விசா விண்ணப்பம் மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன இராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து 2020 முதல் சீன நாட்டவர்களுக்கான சுற்றுலா விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. மேலும், சீன முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான சீன செயலிகள்  தடை செய்யப்பட்டன. கொவிட் பெருந்தொற்றை கருத்தில் கொண்டும், சீன நாட்டினருக்கான விசா சேவை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையே சுமுக உறவு அதிகரிக்கத் தொடங்கி இருப்பதை அடுத்து, விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்கி இருக்கிறது. இந்த ஆண்டு ஜனவரியில், இரு நாடுகளுக்கு இடையே விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.