சீன விவகாரம்?

0
197

சர்ச்சைக்குரிய சீனாவின் உளவுக் கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்திருக்கின்றது.
இது தொடர்பில் இந்தியா மற்றும் அமெரிக்கா சில அழுத்தங்களைப் பிரயோகித்தபோதிலும்கூட, கப்பலின் வரவை தடுக்க முடியவில்லை.
கப்பலுக்கான அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது என்னும் அடிப்படையிலேயே தற்போது கப்பல் இலங்கைக்குள் பிரவேசித்திருக்கின்றது.
சீனக் கடற்படையின் கப்பல், செயற்கை கோள் மற்றும் நீர்மூழ்கிகளின் நகர்வுகளை கண்காணிக்கும் வல்லமை கொண்டது என்னும் அடிப்படையில குறித்த கப்பல், இந்தியாவுக்கு அருகில் தரித்து நிற்பதானது அதன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நோக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பொதுவான பார்வை இருந்தபோதிலும்கூட, இந்தியா இவ்வாறான நகர்வுகளைக் கண்டு பெரியளவில் அச்சப்படுவதாகவும் இல்லை.
அவ்வாறானதொரு சூழல் இருந்திருக்குமாக இருந்தால் இந்தியாவின் அணுகுமுறைகள் வேறு விதமாகவே இருந்திருக்கும்.
இந்தியா பொதுவாகவே, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள புவியியல் அருகாமையை வாய்ப்பாகக் கருதுகின்றது.
இவ்வாறான வாய்ப்பு சீனாவுக்கு இல்லை.
இந்தியாவை அதிகம் பகைத்துக் கொண்டு செயல்பட முடியாதென்னும் நோக்கிலேயே சீனாவும் அதன் செயல்பாடுகளை நன்கு திட்டமிட்டு முன்னெடுக்கின்றது.
மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில்தான் சீனாவுக்கும் கொழும்புக்குமான உறவு முன்னர் எப்போதுமில்லாதவாறு வலுவடைந்தது.
இந்த அடிப்படையில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு மகிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாவார்.
இதற்கு விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தமே பிரதான காரணமாகும்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது, இந்தியா ஆயுத உதவிகளை செய்ய மறுத்துவிட்டது.
மனித உரிமை காரணங்களை முன்வைத்து அமெரிக்காவும் மறுத்துவிட்டது. இந்த இடத்தையே சீனா கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டது.
ஒருவேளை இந்தியா இறுதி யுத்தத்துக்கு பெருமளவில் ஆயுத உதவிகளை வழங்கியிருந்தால் சீனா இந்தளவுக்கு இலங்கைக்குள் காலூன்ற முடியாமல் போயிருக்கும்.
ஆட்சி மாற்றத்தின் மூலம் சீனா ஓர் எல்லைக்குள் முடங்கிவிட முடியுமென்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூட அப்படி நிகழவில்லை.
ரணில் – மைத்திரி ஆட்சியின் ஆரம்பத்தில், சீனாவின் திட்டங்களை மீள்பரிசீலனை செய்யப் போவதாகக் கூறிய போதிலும் கூட அது நடக்கவில்லை.
அதற்கு மாறாக, அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டது.
இது பாரதூரமான மூலோபாய தவறாக நோக்கப்பட்டது.
ஆனால், கொழும்பின் பக்கத்திலோ இது தொடர்பில் இந்தியாவுக்கு அறிவுறுத்திய போதிலும் அவர்கள் அதிகம் ஆர்வம் காண்பிக்கவில்லை.
இந்த நிலையில், சீனாவின் கடன்களை திரும்பிச் செலுத்த முடியாத நிலையில், துறைமுகத்தை சீனாவுக்கு வழங்க வேண்டியேற்பட்டதாகக் கூறுகின்றனர்.
ஆனால், இதுவே தற்போது வேறு வகையான நெருக்கடியாக மாறியிருக்கின்றது.
99 வருட குத்தகை என்பதால், துறைமுகத்தின் கட்டுப்பாடு வெளியில் சொல்லப்படுவது போன்று இலங்கையின் கட்டுப்பாட்டில் இல்லை.
2014இல் சீனாவின் நீர்மூழ்கிகள் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டன.
இதனை இந்தியா கடுமையாக ஆட்சேபித்திருந்தது.
2015இல் ஆட்சி மாறியது. இந்தியாவின்மீதே ராஜபக்ஷ குற்றம் சாட்டியிருந்தார்.
புவிசார் அரசியல் போட்டிகளால் ஏற்படும் நெருக்கடிகளின் விளைவாக ஆட்சி மாற்றங்கள் அடிக்கடி நிகழக்கூடிய சூழல் காணப்படுகின்றது.
ஆனால், ஆட்சி மாற்றங்களின் மூலம் மட்டுமே இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட முடியுமா என்னும் கேள்வியுமுண்டு.
ஆனால், சீன விவகாரம் ஏதோவொரு வகையில் இலங்கையின் அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத தொந்தரவாக தொடரத்தான் போகின்றது.
இதனை கொழும்பு எவ்வாறு கையாளப் போகின்றது என்பதில்தான் இலங்கையின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்படப் போகின்றது.