மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிலைய வளாகத்தினுள் உயிரிழந்த நிலையில் வாய் பேச முடியாத ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.
கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்தவரும் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிற்றூழியராக கடமையாற்றிவரும் 49 வயதுடைய இரண்டு பிள்ளையின் தந்தையான செபமாலை ஜெயகாந்தன் குருஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நிறுவன காரியாலயத்தில் தங்கியிருந்து மாவட்ட செயலகத்திற்கு கடமைக்கு சென்றுவருவதாகவும் இரவில் குறித்த நிலையத்தில் இங்கு பாதுகாவலராகவும் செயற்பட்டுவரும் இவர் வழமைபோல நேற்று இரவு கடமையில் இருந்துள்ளார்.
எனினும் இன்று காலை 11 மணி வரை நிலையத்தின் கதவு திறக்கப்படாததையடுத்து, நிலையத்திற்கு வருகை தந்தவர்கள் கதவை உடைத்து உள் சென்றபோது படுத்த படுக்கையில் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.