சொந்த மண்ணில் இந்தியா தோல்வி! இங்கிலாந்து அபார வெற்றி!!

0
206

இந்திய அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில், 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

அஹமதாபாத் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்ரேயஸ் ஐயர் 67 ஓட்டங்களையும் ரிஷப் பந்த் 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜொப்ரா ஆர்செர் 3 விக்கெட்டுகளையும் அடில் ராஷித், மார்க் வுட், கிறிஸ் ஜோர்தான் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 125 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 15.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜேஸன் ரோய் 49 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்திய அணியின் பந்துவீச்சில், யுஸ்வேந்திர சஹால் மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, நான்கு ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் அடங்களாக 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்த ஜொப்ரா ஆர்செர் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளது.