பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவுக்கான வாக்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ள கருத்து பொய்யானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது ருவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைக் கடந்த வாரம் சந்தித்தபோது, அவர்களில் சிலர் தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவதற்கு வாக்களித்தனர் என கூறியிருந்தார். இந்த நிலையிலேயே, சுமந்திரன் தனது ருவிட்டர் பக்கத்தில், ‘அது பொய்யான கூற்று’, என பதிவிட்டுள்ளார்.மேலும், ஜனாதிபதி பொய் பேசுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் ஏகமனதாக டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்தோம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கருத்தை எந்தக் கட்டத்திலும் ஒருவர் கூட கூறியிருக்கவில்லை என எம். ஏ. சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.