ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் பிரதேச செயலக மட்டத்தில் வழங்கும் செயற்பாட்டை, உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (21) முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் கீழ் மட்டத்திற்கு பரவலாக்குவதற்கான சிறப்பு செயலமர்வுத் தொடரின், வட மாகாண செயலமர்வு இதற்கு இணையாக இன்று (21) நாள் முழுவதும் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தில் மூலம் பொதுமக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளல், கடந்த பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களாலும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் இவ்வாறு பரவலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வறுமை ஒழிப்பு நிவாரணங்கள்,கல்விப் புலமைப்பரிசில் வழங்கல், கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை பாராட்டுதல், விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை, தேசிய அளவில் அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களைப் பாராட்டுதல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும். ஆகவே, இந்த வேலைத்திட்டத்துடன் 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், பிரதேச செயலகங்கள் மூலம் இலங்கையின் அணைத்து பிரதேசங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஜனாதிபதி தலைமையிலான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு மேற்கொண்ட தீர்மானத்தின் படி, பொதுமக்களுக்கு இந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக அதிகமான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் செயற்திறன்மிக்க வகையில் சேவைகளை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் ஊடாக ஜனாதிபதி நிதியத்தை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை கட்டுப்படுத்துகின்றன.
ஜனாதிபதி நிதியத்தின் வகிபாகம் குறித்து , ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளரும் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளருமான ரோஷன் கமகே, இங்கு வருகை தந்தவர்களுக்கு விளக்கமளித்தார்.
இதன்போது, அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணையவழி ஊடாக வழங்குதல், வட மாகாணத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர், யாழ்.மாவட்ட செயலாளர் உட்பட வடமாகாண அரச அதிகாரிகள், ஜனாதிபதி நிதியத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.