ஜனாதிபதி, பிரதமருக்கு டலஸ் அழகப்பெரும எழுதிய முக்கிய கடிதம்!

0
171

அரசியல் கட்சி பேதங்களை துறந்து சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கின்ற நிலையில் மறுபுறம் ஜனாதிபதியின் பிரதான பிரதிவாதிகள் இலக்கு வைக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.

பாராளுமன்ற தெரிவு குழுவில் இருந்து நானும் , எனக்கு ஆதரவாக செயற்பட்டவர்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளமை பாரம்பரியமான அரசியல் செயலொழுங்கை மீறும் செயற்பாடு என முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி,சபாநாயகர்,சபை முதல்வர்,ஆளும் தரப்பின் பிரதம கொறடா,எதிர்க்கட்சி தலைவர்.தேசிய பாராளுமன்றத்தின் உலகளாவிய அமைப்பு மற்றும் பொதுநலவாய அமைப்பின் பாராளுமன்ற சங்கத்திற்கும் இக்கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சபாநாயகர் கடந்த பாராளுமன்ற அமர்வின் போது குறிப்பிடதற்கமைய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு,மற்றும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவிற்காக உறுப்பினர்களை தெரிவு செய்யும் கண்காணிப்பு குழுவில் தொடர்ந்து சேவையாற்றிய என்னை அதிலிருந்து நீக்கியுள்ளமை முறையற்ற அரசியல் செயலொழுங்காகும்.

அத்துடன் பாராளுமன்றில் ஜனாதிபதி தெரிவின் போது எனக்கு ஆதரவாக செயற்பட்ட பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ்,மற்றும் பொதுஜன பெரமுனவின் ஏனைய உறுப்பினர்களான டிலான் பெரேரா,நாலக கொடஹேவா ஆகியோரை அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் பங்குப்பற்றுவதை இடைநிறுத்தியுள்ளமை சுயாதீன உரிமைகளுக்கும்,மக்களாணைக்கும் எதிரானதொரு செயற்பாடாகும்.

ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும்,அரச ஊழல் தொடர்பில் வெளிப்படுத்தலுக்காகவும் முன்னின்று செயற்பட்ட கோபா குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத்தின் பெயர் அரசாங்கத்தினால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு,பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆரசியல் அரசியல் கொள்கையினை துறந்து நாட்டுக்காக சர்வக்கட்சி அரசாங்கத்தில் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கும் நிலையில் மறுபுறம் ஜனாதிபதியின் பிரதான பிரதிவாதிகளை இவ்வாறு இலக்கு வைத்து நெருக்கடிக்குள்ளாக்குவது பாரம்பரியமான அரசியல் செயலொழுங்கினை மாத்திரம் முன்னெடுத்துச் செல்லும் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.

ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் பேச்சளவில் மாத்திரம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஜனநாயகத்தை பேச்சளவில் மாத்திரமல்லாது,செயல் வடிவிலும் செயற்படுத்த வேண்டும்.

புதவிக்கு ஆசைப்பட்டு இந்த கடிதத்தை அனுப்பி வைக்கவில்லை.தற்போது முன்னெடுக்கப்படும் இரட்டை வேட செயற்பாடுகள் குறித்து தெளிவுப்படுத்துவது இதன் பிரதான நோக்கமாக உள்ளது.