பசிபிக் பெருங்கடற்பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
குறைந்தபட்சமாக 4.0 தொடக்கம் 7.6 ரிக்டர் வரை நிலநடுக்கங்கள் பதிவாகின. இதனால் ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா உள்ளிட்ட மாகாணங்கள் மொத்தமாக குலுங்கியதுடன் டோக்கியோ வரை நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்தடுத்து நிகழ்ந்த இந்நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதுடன், அவற்றில் விரிசல்களும் ஏற்பட்டுள்ளன. சாலைகள், வீதிகள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால் 33,500க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் இந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.