ஜெனிவாவில் பேராயர்?

0
176

இலங்கையின் பேராயர் மல்கம் ரஞ்சித் ஜ.நா மனித உரிமைகள்
பேரவையின் ஆணையாளரை சந்தித்து ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில்
முறையிட்டிருக்கின்றார். இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பிலான
பொறுப்பு கூறல் விடயம் தொடர்பில் மல்கம் ரஞ்சித் ஒருபோதும் குரல்
கொடுத்ததில்லை. தனக்கு தொடர்பில்லாத ஒரு விடயம் போன்றே அவர்
நடந்து கொண்டார். வடக்கு, கிழக்கை சேர்ந்த ஆயர்கள் தமிழ் மக்களின்
மனித உரிமைகள் தொடர்பில் குரல்கொடுத்து வந்த போதும், பேராயர்
என்னும் வகையில் மல்கம் ரஞ்சித் தனது பகிரங்க ஆதரவை ஒரு போதும்
வழங்கியதில்லை. இந்த நிலையில், அவர் தற்போது, கத்தோலிக்க
மக்களுக்கு இடம்பெற்றிருக்கும் அநீதி தொடர்பில் ஜ.நா மனித உரிமைகள்
பேரவையை நாடியிருக்கின்றார்.
இலங்கையின் அதியுயர், கத்தோலிக்க மதத் தலைவர் ஒருவர்,
இலங்கையின் நீதித்துறையின் மீது நம்பிக்கையின்றி, ஜ.நாவை நாடியிருக்
கின்றார். ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகள் தண்டிக்கப்பட
வேண்டுமென்னும் கோரிக்கையை அவர் தொடர்ந்தும் முன்வைத்துவந்தார்.
ஆனால் விசாரணையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் எதுவும்
இடம்பெறவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில்தான், சர்வதேசத்தின்
தலையீட்டை கோருகின்றார். தென்னிலங்கை சிங்கள பௌத்த தேசியவாதி
கள், சர்வதேசத்தின் தலையீட்டை கோருபவர்களை தேசத் துரோகிகளென்று
கூறுவதுண்டு. அந்த துரோக வரிசையில் மல்கம் ரஞ்சித்தும் இணைந்திருக்
கின்றார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே முன்னுக்கு பின் –
முரண்பாடான கருத்துக்கள் வெளியாகியிருந்தன. ஆரம்பத்தில் சில முஸ்லிம்
அரசியல்வாதிகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். ஈஸ்டர் தாக்குதல்
சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ‘இஸ்லாமிய அரசு’ (ஐ.எஸ்)
என்னும் அமைப்பினால் நடத்தப்பட்டது. தாக்குதல் இடம்பெற்ற முறைமை
யும், தாக்குதலின் இலக்குகளும், அதன் சர்வதேச வலையமைப்பை மிகவும்
துல்லியமாக வெளிக்காட்டுகின்றன. இவ்வாறானதொரு தாக்குதல் தொடர்
பான முன்னெச்சரிக்கைளும் இருந்ததாகவே கூறப்பட்டது. ஆரம்பத்தில்,
இதற்கு பின்னால் சர்வதேச சக்தியொன்று இருப்பதாகவும் மல்கம் ரஞ்சித்
குறிப்பிட்டிருந்தார். அவரே பின்னர் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டு
மென்றும் அரசாங்கத்தை கோரியிருந்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மல்கம் ரஞ்சித்தின் தொடர்ச்சியான
அழுத்தங்களுக்கு வடகிழக்கிலுள்ள ஆயர்கள் ஆதரவு வழங்கவில்லை.
தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மல்கம் ஆதர
வளிக்காமையே இதற்கான காரணமாக இருக்க வேண்டும். ஈஸ்டர்
தாக்குதலால் கிழக்கு மாகணத்தை சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் கொல்லப்பட்டி
ருக்கின்ற போதும், வடகிழக்கை சேர்ந்த தமிழ் கத்தோலிக்க மதபீடம்
அதற்கான நீதியை கோரும் மல்கம் ரஞ்சித்தின் போராட்டத்தோடு தங்களை
இணைத்துக் கொள்ளவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால் – இலங்
கையின் கத்தோலிக்க மத பீடமானது, தமிழ் – சிங்களமென்று பிளவுற்றிருப்பது
வெளிப்படையான ஒன்றாகும்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு மனித உரிமைகள் பேரவையின்
ஆணையாளரை சந்தித்து விளக்கமளித்திருக்கின்ற நிலையில், வழக்க
மாக ஈழத் தமிழர்கள் மட்டும் கூடும் ஜெனிவாவில், இம்முறை, சிங்கள
அரசியல் வாதிகளும், சிங்கள பேராயரும் நீதி வேண்டி கூடியிருக்கின்றனர்.
இதுவரையில் இலங்கைக்குள் நீதி சாத்தியமில்லை என்று தமிழர்கள்
கூறிவந்த நிலை போய், சிங்களவர்களும் இலங்கை அரசாங்கத்தினால்
நீதியை உறுதிப்படுத்த முடியாதென்று கூறும் நிலைமை உருவாகியிருக்கிறது.
அரசாங்கத்தை பொறுத்தவரையில் தமிழர்களின் கோரிக்கையை விடவும்
பேராயர் மல்கம் ரஞ்சித்தின் கோரிக்கை வலுவானது. ஏனெனில் தமிழர்
களை விடுதலைப் புலிகளோடு தொடர்புபடுத்தி, எதிர்வாதம் புரியலாம்
ஆனால், பேராயர் மல்கம் ரஞ்சித்தின் மீது அவ்வாறான குற்றச்சாட்டை
முன்வைக்க முடியாது.